இன்றே ஆரம்பிச்சாச்சு.. தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை.. 2 நாட்களுக்கு தொடருமாம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இன்று, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எதிர்வரும், 2 நாட்களுக்கு, வெப்பசலனம் காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல், 45 கிமீ வரை வீச வாய்ப்பு உள்ளது.
18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும்... விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு
மழை பதிவு
கரூர், திருச்சி, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் போன்ற உள்மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஏற்காடு, சேலத்தில் 7 செமீ மழையும், திருப்பூரில் 6 செமீ மழையும், போச்சம்பள்ளி, ஓமலூரில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன்
இதனிடையே, தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சென்னையில் தொடர்ந்து 180 நாட்கள் மழை இல்லாதது பற்றி நகரவாசிகள் பல கருத்துக்களை சொல்லி வருகின்றனர். ஆனால், உண்மையில் கடந்த வருடமும் தொடர்ந்து 187 நாட்கள் சென்னையில் மழை கிடையாது.
சென்னைக்கு ஏன் மழை இல்லை
கடந்த 20 ஆண்டுகள் புள்ளி விவரத்தை பார்க்கும் போதும் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணங்களால் மட்டுமே சென்னையில் மழை வந்துள்ளது. சென்னையில் மழை பெய்ய வேலூர் அல்லது நகரி மலைகளில் மேகங்கள் உருவாகி வர வேண்டும். இம்முறை உருவான மேகங்கள் சேலம்,கிருஷ்ணகிரி பக்கம் நகர்ந்து சென்றுள்ளன. எனவேதான் தமிழகத்தின் பிற பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இன்று மழை
இதனிடையே, பல்லடம், உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில், இன்று பரவலாக மழை பதிவாகியுள்ளது. திருச்சி, பெரம்பலூர், ராசிபுரம், உடுமலை, கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூரிலும் மாலையில் மழை கொட்டித் தீர்த்துள்ளது.