கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் ஜில் அறிவிப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, திண்டுக்கல்,தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதம் முதலே பல மாவட்டங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் மாலை நேரங்களில் கனமழை கொட்டி வருகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டியது. 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்த 48 மணிநேரத்தில் தருமபுரி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல்,விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும்.
இந்தியாவில் பொதுமுடக்கம்...வேலை இழப்பு...சலுகைத்தொகை மறுப்பு...என்ன காரணம்!!
ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.