தமிழக கடலோர மாவட்டங்களில் 11ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் 11ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாத பிற்பகுதியில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாவும் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இன்றும் நாளையும் கிழக்கு திசை காற்றில் நிலவும் சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடகிழக்குப் பருவமழை இயல்வை விட குறைவாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் நவம்பர் 11 முதல் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை முதல் நாகை வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
2 நாட்கள் வறண்ட வானிலை
இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நவம்பர் 11ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யக்கூடும்.
எங்கெங்கு எவ்வளவு மழை
நவம்பர் மாத பிற்பகுதியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டப்பிடாரம், வீரகனூர், செங்கோட்டையில் தலா 4 செ.மீ., கூடலூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
44 சதவிகிதம் மழை குறைவு
தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை மழை பொழிவு இயல்பை விட 44 சதவிகிதம் குறைவாக பதிவாகி உள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் 13 செமீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. 25 செமீ மழை பதிவாக வேண்டிய நிலையில் 13 செமீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.