மாசி மாதத்தில் கொட்டும் கன மழை... குடையில்லாமல் வெளியே போகாதீங்க மக்களே
வளிமண்டல மேலடுக்கில் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: மழைக்காலம் முடிந்து விட்டது இனி குளிர்காலம்தான் என்று அடுத்து வெயிலை அனுபவிக்க வேண்டும் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் வானிலை மையம் ஒரு ஜில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இன்று அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். வளிமண்டல மேலடுக்கில் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், வளி மண்டல கீழடுக்கில் கிழக்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
21 ஆம் தேதியும், 22ஆம் தேதியும் தமிழகம்,புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். 23ஆம் தேதியன்று வறண்ட வானிலை நிலவும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி கோத்தகிரியில் 9 செமீ, குன்னூரில் 7, செத்துப்பாறையில் 6, அலகாரியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியின் பிற இடங்களில் நாளை மறுநாள் வரை மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கார்த்திகை மாதத்துடன் கடும் மழைக்காலம் முடிந்து விடும். இந்த ஆண்டு தை மாதம் வரை மழை நீடித்தது. கடந்த 1 மாத காலமாக லேசான வெயிலும் கடும் குளிரும் நிலவி வருகிறது. மாசி மாதத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது வானிலை மையம்.