சுள்ளுன்னு வெயிலடிச்சாலும் ஜில்லுன்னு மழை பெய்யுமாம் - வானிலை ஆய்வு மையத்தின் கூல் தகவல்
தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலைஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திர காலத்தில் பல நாட்கள் கோடை மழை பெய்ததால் சூரியனின் கோபப்பார்வையில் இருந்து தமிழக மக்கள் தப்பித்தனர். அக்னி நட்சத்திரம் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரப்போகும் நிலையில் கடந்த இரு தினங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
கடலூரில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை, மதுரையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் சின்கோனா, வால்பாறையில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார், சோலையார், வால்பாறை, அவலாஞ்சி, தேவாலா, மேல் கூடலூர், வால்பாறை தாலுகா அலுவலகம், கூடலூர் பஜாரில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. அரிமளம்,பார்வூட் பகுதியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
பல பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 27ஆம் தேதி வரைக்கும்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இன்றைய தினம் இலட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளைய தினம் தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.