கடலூர், பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: அடுத்த 2 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கடலூர், பெரம்பலூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும் துவக்கம் முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
அந்த பெல்டிற்கு மட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வானிலை அப்டேட்! புயலாக உருவெடுக்குமா
லேசான மேக மூட்டத்துடன்
டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை இருந்தது. மயிலாடுதுறையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. அதன்பிறகு மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் எங்கும் மழை பெய்யவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் பெய்தது. சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாக தெரிந்தது. சென்னையை பொருத்தவரை பெரும்பாலும் லேசான மேக மூட்டத்துடன் காட்சியளித்தது. குறிப்பிடும் படியாக பெரிய அளவில் எங்கும் மழை பெய்யவில்லை.
27 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யகூடும் என்று தெரிவித்து இருந்தது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 27 ஆம் தேதி முதல் டிச.1 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்து இருந்தது.
அடுத்த 2 மணி நேரத்துக்கு
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலூர், பெரம்பலூர், ஈரோடு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை?
நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மழை அளவு (சென்டிமீட்டரில்):
நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட நிலவரப்படி, கீரனுர் (புதுக்கோட்டை) 6, வீரபாண்டி (தேனி) 4, பவானிசாகர் (ஈரோடு), ஆண்டிபட்டி (தேனி) தலா 3, அரண்மனைப்புதூர் (தேனி), கள்ளக்குடி(திருச்சி), சத்தியமங்கலம் (ஈரோடு), படலுர் (பெரம்பலூர்), அதிராம்பட்டிணம் (தஞ்சாவூர்), போடிநாய்க்கனுர் (தேனி), இலுப்பூர் (புதுக்கோட்டை) தலா 2, செட்டிகுளம் (பெரம்பலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), கள்ளக்குறிச்சி, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), பர்லியார் (நீலகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), ஓமலூர் (சேலம்), ஆலங்குடி (புதுக்கோட்டை), துறையூர் (திருச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மதுக்கூர் (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), அரிமலம் (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), உசிலம்பட்டி (மதுரை), சிதம்பரம் (கடலூர்), எரையூர் (பெரம்பலூர்) தலா 1.