TN Weather: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது. வெப்ப நிலையின் தாக்கம் உயர்ந்துள்ளதால் உறைபனிக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
அதிகபட்ச வெப்ப நிலையாக 31 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸும் பதிவாக கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய மழையில்லாமல் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் உப்புநீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராமங்களில் தண்ணீர் கிடைக்காமல், கண்மாய், கிணற்று நீரை குடிக்கின்றனர். இதனால், குடிநீரை ரூ.12க்கு விலைக்கு வாங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.