தமிழகத்தில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. அனல் காற்றும் குறையும் என தகவல்
Recommended Video
சென்னை: தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் முடிவுற்றாலும் வெப்பம் குறைந்தபாடில்லை. கூடவே சேர்ந்து அனல் காற்றும் வீசுவதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்லவே அஞ்சும் சூழல் தான் நிலவுகிறது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கோடை மழை பெய்து மக்களை அவப்போது நிம்மதியடைய செய்து வருகிறது.
ஜூன் 6-ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதலே குமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, முஞ்சிறை, புதுக்கடை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வானிலை மையம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயிச்சிட்டீங்க.. இதை வெச்சு என்ன செய்ய போறீங்க?.. 37 பேரை வச்சு ஒன்னும் செய்ய முடியாது.. சீமான்
எனினும் நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறியுள்ள வானிலை மையம், தமிழ்நாட்டில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக கூறியுள்ளது.
வெப்பத்தின் தாக்கம் உள் மாவட்டங்களில் பகலில் அதிகமாக இருந்தாலும், மாலை வேளைகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மித மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரையில் 5 செ.மீ மழையும், திருப்பத்தூர், திருத்தணியில் தலா 3 செ. மீமழையும் பதிவாகியுள்ளது.
இதனிடையே அந்தமானில் பருவமழை துவங்கியுள்ளதை அடுத்து கடலோர பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 39 டிகிரி செல்சியசில் இருந்து, குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.