சென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்!
ஜுன் 20-க்கு பிறகு சென்னையில் மழைக்கு வாய்ப்பு என வெதர்மேன் தெரிவித்துள்ளார்
சென்னை: இன்றோடு 191 நாட்களாகி விட்டன சென்னை மாநகரம் மழைத் துளியைப் பார்த்து.. வானம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது தமிழகத்தின் சிங்காரத் தலைநகரம். ஆனால் இதுவரை மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லை.
இந்த நிலையில்தான் ஒரு சந்தோஷ செய்தியை சொல்லியுள்ளார் நம்ம தமிழ்நாடு வெதர்மேன்.. அதாவது பிரதீப் ஜான். ஜூன் 20ம் தேதிக்குப் பிறகு மழையை எதிர்பார்க்கலாமாம் சென்னை.
சென்னை நகரம் கடந்த 191 நாட்களாக வறண்டு கிடக்கிறது. ஒரு மழை கூட பெய்யவில்லை. இதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது. வழக்கமாக கோடை காலத்தில் ஒரு மழையாவது வந்து விடும். வந்து மண்ணை நனைத்து விட்டுப் போகும். ஆனால் இந்த முறை மொத்தமாக காய விட்டு விட்டார் மிஸ்டர் வருண் பகவான்.
ஆறுதல் செய்தி
200 நாட்களை இப்டியே தொட்டு விடுவோமா என்று அனைவரும் கவலையில் மூழ்கியுள்ள நிலையில்தான் தற்போது ஆறுதல் செய்தியைச் சொல்லியுள்ளார். அதாவது ஜூன் 20ம் தேதிக்குப் பிறகு மழையை எதிர்பார்க்கலாம் என்பதுதான் அவர் சொல்லியுள்ள செய்தியின் சாராம்சம்.
பிரதீப்ஜான்
இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் பிரதீப் ஜான். அதில் அவர் கூறியுள்ளதாவது: "கடல் காற்று வீசவில்லை. இதன் காரணமாகவே சென்னையில் அனல் அதிகமாக இருக்கிறது. மழைக்கான அறிகுறியும் இதுவரை இல்லாமல் உள்ளது. தென் மேற்குப் பருவ மழை சற்று பலவீனமாக உள்ளது. அதற்குக் காரணம், மேற்கு மற்றும் வட மேற்கிலிருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால்தான்.
குளிர்ச்சிக்கு வாய்ப்பு
ஆனால் இந்த நிலை ஜூன் 21ம் தேதிக்குப் பிறகு மாறும். வெப்ப நிலையிலும் மாற்றம் வரும், குறையும். சென்னையைப் பொறுத்தவரை மே மாதத்தை விட ஜூன் மாதம்தான் மிகவும் வெப்பமாக உள்ளது. கிட்டத்தட்ட 41 டிகிரி செல்சிஸ் வெப்ப நிலை இன்று மாலை பதிவானது. மரங்கள் மட்டும் மழையைக் கொண்டு வந்து விடாது. அதேசமயம், மரங்கள் அதிகம் இருந்தால் குளிர்ச்சிக்கு ஏதிக வாய்ப்புண்டு. இந்த அளவுக்கு வெப்பத்தை நாம் சந்தித்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.
தண்ணீர் பிரச்சனை
ஜூன் மாதத்திலும், ஜூலையிலும் நமக்கு அதாவது சென்னைக்கு மழை கிடைத்தாலும் கூட அது தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கூடிய அளவுக்கு இருக்காது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும் வாய்ப்புகளையும் எதிர்பார்க்க முடியாது.
பருவமழை
அதேசமயம், ஜூன் 21ம் தேதியிலிருந்து கர்நாடகம், கேரளா, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவ மழை சூடு பிடிக்கும் என்று கூறியுள்ளார் வெதர்மேன். இவர் சொல்வதைப் பார்த்தால் மழை வரும்.. ஆனால் மனசு குளிரும் அளவுக்கு இருக்காது என்று மட்டும் புரிகிறது.