மக்களே ஹேப்பி நியூஸ்.. காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!
Recommended Video
சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. ஆனாலும் மாலை நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த கோடை மழையால் குறுகிய கால விவசாய பயிர் பயன் பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் மழையால் வெப்பம் ஓரளவுக்கு தணிந்து இரவு நேரங்களில் குளிர் காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு நிலை
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா முதல் கன்னியாகுமரி கடல் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை பெய்யும்
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
அறிவிப்பால் மகிழ்ச்சி
சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடியுடன் கனமழை
இதனிடையே வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி,ஈரோடு,திருப்பூர்,சேலம், கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று வீசும்
மழை பெய்யாத பகுதிகளில் வெப்பம் அதிகமாக காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல காற்றின் வேகமும் 45 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சென்னையில் மேகமூட்டம்
சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றுடன் மழை
இதனிடையே கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. உச்சி வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென காற்றுடன் மழை பெய்வது மக்களிடை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.