1996 பிளான்.. சந்திரசேகர ராவ் அதிரடி மூவ் பின்னணி.. ஸ்டாலினுக்கு அடிக்கிறதா ஜாக்பாட்?
Recommended Video
சென்னை: 1996ம் ஆண்டு பிளானை தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி தலைவருமான சந்திரசேகர ராவ் கையில் எடுத்துள்ளதால், அடுத்த பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவடையும் முன்பாக, சந்திரசேகர ராவ், 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவை கோரிய அவர், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவரும், கர்நாடக முதல்வருமான, குமாரசாமியை தொலைபேசியில் அழைத்து ஆலோசித்துள்ளார்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரும் 13ம் தேதி சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார், சந்திரசேகர ராவ்.
ஸ்டாலின் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்.. திமுகவினரை சந்திக்கும் கேசிஆர்.. கலக்கத்தில் காங்கிரஸ்!
பிரதமர் யோகம்
சந்திரசேகர ராவ் முன் வைக்கும் ஐடியா ஒன்றே ஒன்றுதான். அது தென் மாநிலத்திலிருந்து ஒருவர் முதல்வராக வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதுதான். 1990களில் இந்தியாவில் நிலையற்ற ஆட்சிகள் நிலவின. பிரதமர்கள் மாறியபடியே இருந்தனர். 1996ம் ஆண்டு, பிரதமராகும் யோகம் தேவகவுடாவுக்கு கிடைத்தது. கூட்டணி ஆட்சியின் லாபம் இதுதான். ஆட்சிக்கு ஆதரவு கிடைத்தால் போதும் என நினைக்கும் பெரிய கட்சிகள், மாநில கட்சி தலைவர்களை கூட பிரதமராக்க முன்வருவார்கள்.
சந்திரசேகர ராவ் பிளான்
இதுதான் 1996ம் ஆண்டு பிளான். இப்போதும் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை என்று உறுதியாக நம்புகிறார், சந்திரசேகர ராவ். எனவே, 3வது அணியை உருவாக்கி, தென் இந்தியாவை சேர்ந்த ஒருவரை மீண்டும் பிரதமராக்குவது தனது நோக்கம் என்று அவர் ஆலோசனைகளின் போது அடிக்கோடிட்டு கூறி வருகிறாராம்.
ஸ்டாலினுக்கு வாய்ப்பு?
குமாரசாமி, மற்றும் ஸ்டாலினை சந்திக்கும்போதும் இதே வியூகத்தை சந்திரசேகர ராவ் முன்வைக்கப்போகிறார். ஒருவேளை பிளான் சரியாக இருந்தால், ஸ்டாலினுக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், பாஜக ஆதரவாளர் என்ற விமர்சனத்தை சுமந்து வரும், சந்திரசேகர ராவை, ஸ்டாலின் நம்புவாரா என்பதுதான் சந்தேகம்.
தென் இந்திய பிரதமர்
எந்த கட்சி கூட்டணிக்கும், பெரும்பான்மை கிடைக்காவிட்டால், காங்கிரசுக்கு பிற கட்சிகள் ஆதரவு தெரிவித்துவிட கூடாது என்பதால், சந்திரசேகர ராவ் இப்படி காய் நகர்த்தலாம் என்ற சந்தேகமும் காங்கிரஸ் வட்டாரத்தில் உள்ளது. ஆனால், தென் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பிரதமராகும் வாய்ப்பை உருவாக்கி தருவேன் என அடித்து பேசி வருகிறாராம், சந்திரசேகர ராவ்.