சந்திரசாமியின் கூட்டாளியான ஐ.டி. அதிகாரி அசோக் அகர்வாலுக்கும் ’கட்டாய ஓய்வு’
டெல்லி: சர்ச்சைக்குரிய சாமியாரான மறைந்த சந்திராசாமியின் கூட்டாளிகளில் ஒருவரான வருமான வரித்துறை இணை இயக்குநராக இருந்த அசோக் அகர்வாலுக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தில் புகார்களுக்கு உள்ளான ஊழல் அதிகாரிகள் 12 பேர் கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அதிரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அதிரடி நடவடிக்கை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதேநேரத்தில் பாஜகவின் ராஜய்சபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, துக்ளக் குருமூர்த்தி உள்ளிட்டோர் நேர்மையான சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புலம்புகின்றனர். அரசின் நடவடிக்கைக்குள்ளாகி இருக்கும் அதிகாரிகளில் முக்கியமானவர் அசோக் அகர்வால்.
கிளம்பியது அடுத்த சர்ச்சை... ஓபிஎஸ் முதல்வர்.. எடப்பாடி துணை முதல்வர்.. அதிமுக போஸ்டரால் பரபரப்பு
சந்திராசாமி கூட்டாளிக்கும் வேட்டு
வருமான வரித்துறை இணை இயக்குநராக இருந்தவர் இந்த அசோக் அகர்வால். அமலாக்கத்துறையில் துணை இயக்குநராக பணியாற்றிய போது ஊழல் முறைகேடுகளுக்காக 1999ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்தான் அசோக் அகர்வால். சர்ச்சைக்குரிய சந்திராசாமியின் கையாளாக மத்திய அரசு பணியில் அமர்ந்து கொண்டு கோலோச்சியவர். 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் பணியில் சேர்ந்தார். சந்திராசாமியுடன் சேர்ந்து கொண்டு நிதி முறைகேட்டில் ஈடுபட்டது, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தது ஆகிய புகார்களுக்கு உள்ளானவர் இந்த அசோக் அகர்வால்.
பாலியல் புகாரில் ஸ்ரீவத்சவா
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, துக்ளக் குருமூர்த்தி ஆகியோர் விழுந்தடித்து ஆதரிக்கும் எஸ்.கே.ஸ்ரீவத்சவா மீது 2 பெண் அதிகாரிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். 2 பெண் அதிகாரிகள் மீது விபசாரம் செய்ததாக முன்னாள் எம்.பி. ஜெய் நாராயணன் நிஷாத் மூலம் வழக்கு தொடர்ந்தவர் ஸ்ரீவத்சவா. நிர்வாக தீர்ப்பாயம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீவத்சவா மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகாலமாக துறை ரீதியான விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார்.
சொத்து குவிப்பு
மற்றொரு அதிகாரியான ஹோமி ரஜ்வன்ஸ், வருமானத்துக்கு அதிகமாக ரூ3.17 கோடி சொத்து குவித்ததாக வழக்கை எதிர்கொண்டிருக்கிறார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஹோமி ரஜ்வன்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முறைகேடு அதிகாரிகள்
தற்போது கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளில் 4 பேர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகார் உள்ளது. 6 அதிகாரிகள், துறை ரீதியான தகவல்களை குற்றவாளிகளிடம் கொடுத்து அவர்களை வழக்குகளில் இருந்து தப்பிக்க உதவி செய்தவர்கள். மற்றொரு அதிகாரி, சிபிஐயால் வழக்கு பதிவு செய்யப்பட்டு 2009-ம் ஆண்டு முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அவர் மீதான கிரிமினல் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.
ஹவாலா மூலம் சொத்து குவிப்பு
இன்னொரு அதிகாரி, முறைகேட்டில் ஈடுபடுவர்கள் மீது முதலில் வழக்கு பதிவு செய்வது, அதை வைத்து மிரட்டி பணம் பறிப்பது, பின்னர் வழக்கை நீர்த்து போக செய்வது என செயல்பட்டு வந்தவராம். அதேபோல் ஹவாலா பணம் மூலம் ரூ1.55 கோடி சொத்து குவித்த ஒரு அதிகாரியும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பினாமி கம்பெனி நடத்திய தொழிலதிபரிடம் ரூ50 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரிக்கும் தற்போது கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.