ஓய்வு நேரத்தில் ஓவர் டைம்.. லோ பிக்சல் போட்டோவை வைத்தே கலக்கிய சுப்ரமணியன்.. வியந்து போன நாசா!
நாசா வெளியிட்ட குறைந்த பிக்சல் கொண்ட புகைப்படங்களை பயன்படுத்தியே சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: நாசா வெளியிட்ட குறைந்த பிக்சல் கொண்ட புகைப்படங்களை பயன்படுத்தியே சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார்.
மூன்று மாதங்களுக்கு பிறகு நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. சந்திராயன் 2ன் ஆர்பிட்டர் சரியாக வேலை செய்து வரும் நிலையில் அதன் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது.
சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் அனுப்பிய மெயில் மற்றும் டிவிட் ஆதாரங்களை வைத்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரே நாளில் உலகம் முழுக்க சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் வைரலாகி உள்ளார்.
உலகை திரும்பி பார்க்க வைத்த சண்முக சுப்பிரமணியன்.. ட்விட்டரில் சர்வதேச ஊடகங்கள் முற்றுகை
வெறும் புகைப்படம்
சண்முக சுப்ரமணியன் இந்த கண்டுபிடிப்பு மொத்தத்தையும் வெறும் புகைப்படத்தை வைத்தே கண்டுபிடித்து இருக்கிறார். ஆம் நாசா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளார்.நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் வெளியிட்ட புகைப்படங்களை இவர் தீவிரமாக ஆராய்ந்து இருக்கிறார்.
சென்னை எஞ்சினியர்
சென்னையில் கணினி என்ஜினியராக இருக்கும் சண்முக சுப்ரமணியன் அந்த புகைப்படங்களை அலுவலக நேரம் போக ஓய்வு நேரத்தில் ஆராய்ந்து உள்ளார். ஆனால் போக போக மிக தீவிரமாக இதில் கவனம் செலுத்தி, அந்த புகைப்படங்களை மிகவும் கவனமாக பரிசோதித்து உள்ளார்.
எல்லா புகைப்படமும்
இதற்காக அவர் நாசா வெளியிட்ட எல்லா புகைப்படங்களையும் தேடி கண்டுபிடித்துள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால் நாசா வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் லோ பிக்சல் புகைப்படங்கள்தான். ஆம் நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter)ல் இருக்கும் கேமராக்கள் வெறும் 1.3 மீட்டர் பிக்சல் கொண்டதுதான்.
அட செம
இதன் மூலம் இணையத்தில் வெளியான புகைப்படங்களும் கூட எச்டி புகைப்படங்கள் கிடையாது. ஆனால் அதை பார்த்தே இவர் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளார். இதில் விக்ரம் லேண்டரின் மூன்று பெரிய பாகங்கள் இருந்ததை அவர் கண்டுபிடித்துள்ளார்.
பேட்டி அளித்தார்
இது தொடர்பாக ஆங்கில சேனல் ஒன்றுக்கு சண்முக சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார். அதில், விக்ரம் லேண்டர் சரியாக இறங்கி இருந்தால் கூட மக்கள் அதை அவ்வளவு கவனித்து இருக்க மாட்டார்கள். ஆனால் விக்ரம் லேண்டர் மாயம் ஆன பின் பலர் அதை படிக்க தொடங்கினார்கள். இவரின் கண்டுபிடிப்பை பார்த்து தற்போது நாசாவே வியந்து போய் இருக்கிறது.
விக்ரம் லேண்டர்
விக்ரம் லேண்டர் பற்றி நிறைய தவறான செய்திகள் வந்தது. இதனால் விக்ரம் லேண்டர் குறித்து நான் ஆராய்ச்சி செய்தேன். அது கடைசியாக சென்ற வேகம், கடைசியாக தொடர்பு துண்டிக்கப்பட்ட இடம். கீழே சென்ற பாதை இவற்றை வைத்து இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினேன், என்று சண்முக சுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளார்.