திக், திக்.. 56 நிமிடங்கள்தான் பாக்கி.. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சந்திரயான்- 2 கவுன்டவுன்!
Recommended Video
சென்னை: நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து ஏவ இருந்தது. இதற்கான கவுன்டவுன் ஞாயிற்றுக்கிழமை காலை 6.51 மணிக்கு துவங்கியது.
சுமார் 44 மீட்டர் உயரம் கொண்ட 640 டன் ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி-எம்.கே III, விண்கலத்தை செலுத்த தயாராக நிறுத்தப்பட்டது. 'பாஹுபலி' என்று செல்லப்பெயர் பெற்றது இந்த ராக்கெட். இதற்கு காரணம் பாஹுபலி படத்தில் ஹீரோ கனமான ஒரு லிங்கத்தை தூக்கும் காட்சி பிரபலமானது. அதுபோல, இந்த ராக்கெட்டும் 3.8 டன் எடையுள்ள சந்திரயான் -2 விண்கலத்தை சுமக்கப்போகிறது என்பதால் இந்த செல்லப் பெயரை பெற்றது.
இதிலுள்ள லேன்டர் 'விக்ரம்' செப்டம்பர் 6ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் முறையாக நிலவின் தென்துருவம் பகுதியில் ஆய்வு நடத்தும் நோக்கத்தில் சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட இருந்ததால் உலக நாடுகள் அனைத்துமே இந்த மிஷனை உற்று நோக்கின.
இந்த நிலையில்தான், கவுன்டவுன் நிறைவடைய இருந்த 56 நிமிடங்கள், 24வது வினாடியில், திடீரென கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டது. இதனால், ஸ்ரீகரிகோட்டாவில் குவிந்திருந்த பத்திரிக்கையாளர்களும், பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து வந்து குவிந்திருந்த மாணவ, மாணவிகளும் திடுக்கிட்டனர்.
A technical snag was observed in launch vehicle system at 1 hour before the launch. As a measure of abundant precaution, #Chandrayaan2 launch has been called off for today. Revised launch date will be announced later.
— ISRO (@isro) July 14, 2019
ஏன், எதற்கு என தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், சந்திரயான்-2 ஏவப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், மறுபடியும் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்ப்டும் என்றும், இஸ்ரோ அறிவித்தது.
இதனால் திடீர் ஏமாற்றம் ஏற்பட்ட்து. இருப்பினும் இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் புதிது கிடையாது. இவற்றை சரி செய்து இஸ்ரோ இதற்கு முன்பாகவும் சாதித்துள்ளது. உலகின் பல நாடுகளிலும் விண்வெளி ஆய்வின்போது, இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்ட வரலாறு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.