பிப். 24-ல் ஜெயலலிதா பிறந்தநாள்... பிரம்மாண்டம் காட்ட திட்டமிட்ட டிடிவி... அதற்குள் சசிகலா உடல்நலிவு
சென்னை: பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது நினைவிடத்தில், சசிகலா தலைமையில் பிரம்மாண்ட முறையில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதற்குள் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவால் இந்த திட்டத்தில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டாலே ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் பலத்தை ஏதோ ஒரு வகையில் ஊடகங்கள் வாயிலாக உணர்த்த முனைவார்கள். பொதுக்கூட்டம், பேரணி, மாநாடு என நடத்தி எந்தக் கட்சிக்கும் தங்கள் கட்சி சளைத்ததல்ல என்பதை வெளிப்படுத்துவார்கள்.
அந்த வகையில் 4 ஆண்டுகால சிறைவாசத்துக்கு பிறகு சசிகலா பங்கேற்கும் முதல் ஜெயலலிதா பிறந்தநாள் விழா என்பதால் அதில் பிரம்மாண்டத்தை காட்ட திட்டமிட்டார் தினகரன். திரளான தொண்டர்கள் சசிகலா பக்கம் நிற்பதை டெல்லிக்கு உணர்த்தும் வகையில் அதற்கான திட்டமிடல்கள் நடைபெற்று வந்தன.
இந்தச் சூழலில் எதிர்பாராத விதமாக சுவாசப் பிரச்சனையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இப்போது கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார் சசிகலா. அவரது திடீர் உடல் நலிவு டிடிவி தினகரன் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சசிகலா விடுதலைக்கு பிறகு அவர் மூலம் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முனைந்தவருக்கு பெங்களூருவில் நடைபெறும் நிகழ்வுகள் களைப்பை தந்திருக்கிறது.
இதனிடையே பிப்ரவரி முதல் வாரத்தில் சசிகலா சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் ஓரிரு வாரங்கள் யாரையும் சந்திக்காமல் முழு ஓய்வில் இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 முதலே தனது இரண்டாவது இன்னிங்ஸை அவர் தொடங்கக் கூடும் எனத் தெரிகிறது.