அவசர பாஸ் வழங்கும் நடைமுறையில் மாற்றம்... மாவட்ட ஆட்சியர்களுக்கு மட்டுமே இனி அதிகாரம்
சென்னை: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு அவசர பாஸ் வழங்கப்பட்டு வந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், திருமணம், இறப்பு, மருத்துவம் ஆகிய மூன்று தேவைகளுக்காக மட்டும் பொதுமக்களுக்கு அவசர பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதனை மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், தாசில்தார்கள், உள்ளிட்டோர் வழங்கி வந்தனர். இந்நிலையில் இனி மேற்கொண்டு தாசில்தார்களிடம் இருந்தோ, நகராட்சி ஆணையர்களிடம் இருந்தோ அவசர பாஸ் பெற முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் அதிகளவில் வெளியே சுற்றுவதால் இந்த அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுமக்களுக்கு அவசர பாஸ் வழங்கும் விவகாரத்தில் தாசில்தார்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், அதிகமான எண்ணிக்கையில் மக்கள் சாலைகளில் நடமாடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பழைய நடைமுறைப்படி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மூலம் மட்டுமே இனி பொதுமக்களுக்கு அவசர பாஸ் விநியோகிக்கப்படும் என்றும், இதன் மூலம் பொதுமக்கள் நடமாட்டம் குறையும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். சென்னை பாடி, வேலூர், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகளவில் பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிந்ததை அடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு.
ஊரடங்கு.. வீட்டில் உள்ள சுட்டீஸ் வைரல் ஆக வேண்டுமா?.. ஒன்இந்தியா தரும் செம வாய்ப்பு.. #KidsAreCool!
இதன் மூலம் இனி நினைத்த நேரத்தில் அருகாமையில் உள்ள தாசில்தார்களை அனுகி பாஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே மாநிலங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்குமாறு முதல்வர்களுக்கு கானொலி மூலம் பிரதமர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.