மாற்றத்தை தவிர்க்க முடியாது: காவி உடை தரித்து வடக்கே போவதை ட்விட்டரில் சூசகமாக அறிவித்த குஷ்பு!
சென்னை: மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்று பாஜகவில் தாம் இணையப் போவது குறித்து ட்விட்டரில் காவி உடையுடன் நடிகை குஷ்பு அறிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார் குஷ்பு. ஆனால் காங்கிரஸ் கட்சியில் தீவிர செயல்பாடுகளில் ஈடுபடாமல் ஒதுங்கியும் இருந்தார்.
அந்த ரூ2 ட்வீட் உண்மை?காங்.-ல் இருக்கிறீர்களா?கேள்விக்கு குஷ்பு நோ கமெண்ட்ஸ்- பாஜகவில் இணைவது உறுதி?
இடைவிடாத பாஜக அழைப்பு
இதனால் அவரை பாரதிய ஜனதா தலைவர்கள் தங்கள் கட்சியில் சேர அழைப்பு விடுத்து வந்தனர். இதனை ஏற்காமல் நிராகரித்தே வந்த குஷ்பு கடந்த வாரம்தான் காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
காங். பற்றி கருத்து இல்லை
ஆனால் இப்போது காங்கிரஸை விட்டு பாஜகவில் அவர் இணைவது உறுதியாகி உள்ளது. டெல்லி செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் காங்கிரஸில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு எந்த கருத்தும் சொல்வதற்கில்லை என பதில் சொல்லிவிட்டார் குஷ்பு.
பாஜகவில் திங்களன்று ஐக்கியம்
டெல்லியில் ஜேபி நட்டா முன்னிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு குஷ்பு, பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது. இதனிடையே சனிக்கிழமையன்று குஷ்பு ட்விட்டரில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என காவி கலர் உடையுடன் போட்ட ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
காவி உடையில் குஷ்பு போட்ட ட்வீட்
குஷ்பு சனிக்கிழமையன்று போட்ட ட்விட்டர் பதிவில், என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நமது பார்வையில் புரிதல்கள், விறுப்பு வெறுப்புகள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. நமது சிந்தனைகளும் எண்ணங்களும் புதிய வடிவங்கள் பெறுகின்றன. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என குறிப்பிட்டிருக்கிறார். பாஜகவை சேர்ந்த நாராயண் திருப்பதி, புரிந்து கொள்ள முடிகிறது எனவும் இதில் பதிவிட்டிருக்கிறார். குஷ்பு பாஜகவில் இணைவதை உறுதி செய்கின்றன அவரது பதிவும் பாஜகவினரின் கமெண்ட்டுகளும்.