உயிரை உற்பத்தி செய்யும் அதிகாரம் பெண்களிடமே.. மக்கள் ஒருமைப்பாட்டின் அவசியத்தை பேசிய சேகுவேரா மகள்!
சென்னை: மறைந்த புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தனது மகள் எஸ்டெஃபானியுடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கேரளா, கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்ற அவர், தற்போது சென்னை வந்திருக்கிறார்.
சென்னை வந்த சேகுவேராவின் மகளான அலெய்டா குவேராவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு குழு சார்பாக கியூபா ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா பேசுகையில், நான் சே-வின் மகள் என்பதால் ஏராளமானோர் என் மீது அன்பை பொழிகிறீர்கள். அதற்காக நான் ஒரு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.
சேகுவேரா இன்று இருந்திருந்தால் வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார் : திருமாவளவன்
அலெய்டாவின் பெருமை
நான் யாருடைய மகள் என்பது எப்போதும் முக்கியமல்ல. நான் யாராக இருக்கிறேன் என்பதே முக்கியம். என் தாயார், நான் குழந்தையாக இருந்த போதே, பூமி பந்தின் நிலத்தின் மீது உறுதியாக காலூன்றி நிற்க வேண்டும் என்று சொல்லி கொடுத்திருக்கிறார். எனவே நான் சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை. நான் என் அம்மாவின் மகள் என்பதற்காகவும் பெருமை கொள்கிறேன். சமூக நீதிக்கு தேவையான செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்று எனது தாய் சிறுவயதிலேயே சொல்லி கொடுத்து வளர்த்திருக்கிறார்.
யானை அனுபவம்
இந்தியாவிற்கு நான் முதல்முறை வந்தபோது, என் மகள் எஸ்டெஃபானி சிறு குழந்தையாக இருந்தார். இந்தியாவில் நிறைய யானைகள் இருப்பதை அறிந்துகொண்ட அவள், அதன் புகைப்படங்கள் வேண்டும் என்று கூறினாள். கேரளாவிற்கு நான் வந்த போது, அங்கிருந்த மிகப்பெரிய யானையை காட்டியதோடு, போராளி மகள் என்பதால் தைரியமாக என்னை யானை மீது ஏற்றி அமரவும் வைத்தார்கள். ஒரு 15 நிமிடங்கள் நான் யானை மீது அமர்ந்தது என்னால் மறக்க முடியாது. இந்தியாவில், தமிழ்நாட்டிற்கு வரும் போது தோழர்களின் அன்பும், அந்த நாட்களும் நினைவில் இருக்கிறது.
சால்வைகள்
கடந்த முறை எங்கு சென்றாலும் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர். இம்முறை மாலைக்கு பதில் சால்வைகள் அணிவித்து வரவேற்றுள்ளனர். இந்த சால்வைகளை நான் கியூபாவுக்கு எடுத்து செல்ல போகிறேன். எனக்கு தமிழ்நாட்டில் கிடைத்த பேரன்பை, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொள்வேன். இன்று நாம் அனைவரும் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும் கூடி இருக்கிறோம். இடதுசாரிகள் உலகம் முழுவதும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டமைக்க வேண்டிய கடமை இருக்கிறது.
மக்களின் ஒருமைப்பாடு
நாம் என்ன செய்தாலும் அதில் ஒரு பொதுநோக்கம் தேவைப்படுகிறது. உங்கள் மாநிலம் தமிழ்நாடு என்று உரக்க சொன்னீர்கள். இன்றைக்கு இந்த பிரச்சினையில் தமிழ்நாடு என்ற பெயர்தான், உங்களை இணைக்கிறது. எந்த பொதுநோக்கமாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். கியூபா இன்று சந்திக்கும் பிரச்சினைகளுக்கு, மக்களின் ஒருமைப்பாடு அதிக தேவையாக இருக்கிறது.
அமெரிக்காவின் தடை
கியூபா மீது அமெரிக்கா ஏராளமான தாக்குதல்களை தொடுத்துக் கொண்டு இருக்கிறது. பொருளாதார தடையால் கியூபாவின் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எந்த அளவிற்கு தடை என்றால், மிகச்சிறந்த சுற்றுலா கியூபாவில் இருக்கிறது. இதன் மூலம் எண்ணற்ற விஷயங்களை பரிமாறக் கொள்ள முடியும். ஆனால் அந்த பொருட்களை ஏற்றிச் செல்ல எங்களிடம் விமானம் இல்லை. அதனால் விமான நிறுவனங்களோடு குறுகிய கால ஒப்பந்தம் செய்தால், உடனடியாக அமெரிக்கா தலையிடும். இதுபோன்ற ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. மருந்து, உணவு உள்ளிட்ட பொருளாதாரத்தின் எல்லா தளங்களிலும் எங்கள் மீது தாக்குதல் நடக்கிறது. நாங்கள் மேம்பட அமெரிக்காவின் பொருளாதார தடை நீக்கப்பட வேண்டும்.
மக்களின் வாழ்வுரிமை
நாங்கள் அமெரிக்காவுடன் சரிசமமான அந்தஸ்தின் அடிப்படையில் வியாபாரம் செய்ய விரும்புகிறோம். எந்த கப்பலும் எங்கள் கடற்கரைக்கு வர மறுக்கிறார்கள். எத்தனை தடைகள் வந்தாலும், கியூபா மக்களின் வாழ்வதற்கான உரிமையை தடுக்க முடியவில்லை. மக்களின் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக சோசியலிஷ சமூக அமைப்பை உருவாக்க விரும்புகிறோம்.
சகோதரர்கள்
குடும்ப அம்சங்களிலும் சமத்துவம் இருக்க வேண்டும். பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் கியூபாவில் உள்ளது. ஏனென்றால் பெண்கள் உயிரை உற்பத்தி செய்யக் கூடிய அதிகாரம் பெற்றவர்கள். பெண்களால் பெரும் வேகத்தோடும், உணர்வோம் போராட முடியும். இந்தியாவுக்கும் கியூபாவுக்கும் தூரம் அதிகமாக இருக்கலாம். ஆனால் இரு மக்களும் சகோதரர்கள் தான். இன்றைய சூழலில் நமது பலத்தை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது.
பணியை தொடருங்கள்
என் தந்தை பொலிவியாவில் கொலை செய்யப்பட்டார். அதற்காக உலகம் முழுவதும் அழுது புலம்பினார்கள். அதனை வைத்து பாடல்கள் உருவாகின. ஒரு பாடலை குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். அது, இழப்பு என்றாலே துயரம் தான். ஆனால், இழப்புக்குள் நமது பலத்தை அதிகரித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளது. எனவே ஒருவர் இறந்தால், நாம் ஒருவரை இழந்தால், உலகம் வருத்தப்படும் என்பது உண்மை. ஆனால், வருத்தம் கண்ணீரால் இல்லாமல் போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும். நான் இறந்தால் எனக்காக நீங்கள் அழாதீர்கள். அதற்கு பதில், நான் விட்டுச்செல்லும் பணிகளை தொடருங்கள் என்பது தான் என்று தெரிவித்தார்.