ஆணவ படுகொலைகளை தடுக்க தவறினால்.. போலீஸ் மீது நடவடிக்கை பாயும்... உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுக்க தவறினால், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுக்கு என தனியாக காவலர்கள் இல்லாததால் ஆணவக் கொலை வழக்குகளை சட்டம்- ஒழுங்கு வழக்குகளை விசாரிக்கும் காவலர்களே விசாரிப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள காவலர்களை கொண்டு அமைக்கப்பட்டது, எப்படி சிறப்பு பிரிவாக கருத முடியும்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆணவக் கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனிபிரிவு ஏற்படுத்தி,ஆணவ படுகொலைகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆணவ கொலைகள் தொடர்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வழங்குவதால் என்ன பயன்?, அவர்களா இந்த குற்றத்தில் ஈடுபடுகின்றார்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை நாளைக்கு தள்ளிவைத்தனர்.
முன்னதாக, நாடு முழுவதும் நடைபெறும் ஆணவக் கொலைகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில், ஆணவ கொலைகள் தொடர்பாக பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.
அப்போது, ஆணவ கொலைகளை தடுப்பது மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.