தொடர் மழையால் செம்பரம்பாக்கம் நீர்மட்டம் உயர்வு... அச்சப்படத் தேவையில்லை -காஞ்சிபுரம் ஆட்சியர்
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியாக உயர்ந்த பின்னர்தான் திறக்கப்படும் என்றும் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: தொடர்மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடும் மழைக்கு நடுவே ஏரியை ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார். ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்த பின்னர் மெதுவாக திறந்து விடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள, நிவர் புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட உள்ளது.
ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசையாமல் நின்ற நிவர் நகர தொடங்கியது.. அதி தீவிர புயலானது.. 145 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசும்
மழை பெய்வதைப் பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறக்கப்படும். ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்தவும், போதிய மணல் மூட்டைகளை வைத்திருக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதாகவும் தொடர் மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து இருப்பதாகவும் கூறினார்.
ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்த பின்னர் மெதுவாக தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார் மகேஸ்வரி ரவிக்குமார்.