ஆய்வாளர் காலைப்பிடித்து.. சட்டென சிகிச்சை தந்த செங்கல்பட்டு எஸ்.பி.. மருத்துவராக மாறிய ஐபிஎஸ்!
சென்னை: காவல் ஆய்வாளர் ஒருவர் காலை பிடித்து செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி விஜயகுமார் திடீரென முதலுதவி சிகிச்சை அளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக இருக்கும் விஜயகுமார், எம்.பி.பி.எஸ், எம்டி பட்டப்படிப்பு படித்த டாக்டர். பின்னர் சிவில் தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரி ஆனார். காவல்துறையில் பொதுவாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பணிக்கு வரும் அதிகாரிகள் தங்களை விட ரேங்கில் குறைவாக இருக்கும் அதிகாரிகளிடம் அவ்வளவு நெருக்கமாக பழக மாட்டார்கள்.
8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!
கொஞ்சம் அதிகார இடைவெளியை ஐபிஎஸ் அதிகாரிகள் கடைபிடிப்பதே வழக்கம். ஆனால் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக இருக்கும் விஜயகுமார் கொஞ்சம் வித்தியாசமானவர்.
வித்தியாசம்
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக இருக்கும் விஜயகுமார், காவல் ஆய்வாளர் தொடங்கி அனைத்து ரேங்க் அதிகாரிகளிடம் தன்மையாக பழக கூடியவர். அலுவல் ரீதியான கண்டிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம், சக அதிகாரிகளிடம், தன்னை விட ரேங்க் குறைவாக கொண்ட அதிகாரிகளிடம் தன்மையாக, நட்பாக பழகும் குணம் கொண்டவர். பணியில் நேர்மையானவர் என்று பெயரெடுத்த அதிகாரி இவர்.
முக்கிய பங்கு
திருப்பத்தூரில் எஸ்.பியாக இருந்தபோது கொரோனா இரண்டாம் அலையை திறம்பட கையாண்டு மக்களின் மதிப்பைப் பெற்றார். எம்.பி.பி.எஸ், எம்டி பட்டப்படிப்பு படித்த டாக்டர் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இவர் மிக முக்கிய பங்கு வகித்தார். பரவலை கட்டுப்படுத்துவதிலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இவர் முக்கிய பங்கு வகித்தார். தற்போது செங்கல்பட்டு எஸ்.பியாக பணியாற்றி வருகிறார்.
நெகிழ்ச்சி
இந்த நிலையில்தான் நேற்று இவர் செய்த செயல் ஒன்று காவல்துறையினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து ஒன்றிய தலைவர்கள் தேர்தல் நடந்து வருகிறது. ஆங்காங்கே மோதல் வெடிக்கும் நிலையில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் வாக்கு செலுத்த பாதுகாப்பாக வர வேண்டும் என்பதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
விஜயகுமார்
இந்த நிலையில் மதுராந்தகத்தில் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட மாவட்ட எஸ்.பி டாக்டர். விஜயகுமார் வந்தார். மதுராந்தகம் பகுதியில் எஸ்பி விஜயகுமார் ஆய்வு செய்தபோது அங்கு பணியில் இருந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் பதற்றத்தில் ஓடி வரும் பொழுது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது.
துடித்தார்
இதனால் அதற்கு மேல் நடக்க முடியாமல் அந்த இடத்திலேயே காலை பிடித்தபடி அந்த காவல் ஆய்வாளர் உட்கார்ந்தார். அந்த காவல் ஆய்வாளர் அங்கேயே காலை பிடித்துக்கொண்டு வலியில் துடித்தார். அப்பொழுது அதை பார்த்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக சென்று, அந்த ஆய்வாளர் காலை பிடித்து சோதனை செய்தார்.
வேகமாக வந்தார்
மருத்துவம் படித்தவர் என்பதால் அங்கேயே பாதிக்கப்பட்ட ஆய்வாளர் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார். இதனால் கால் பிடிப்பு சரியான அதிகாரி எழுந்து மெதுவாக நடந்தார். காவல் ஆய்வாளர் ஒருவர் காலை பிடித்து எஸ்பி ரேங்க் அதிகாரி ஒருவர் திடீரென இப்படி முதலுதவி செய்தது அந்த சக காவலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.