சென்னையின் வறட்சிக்கு சாட்சாத் மக்களே பொறுப்பு.. இயற்கை காரணமல்ல.. அதிர வைக்கும் தகவல்
Recommended Video
சென்னை: வரலாறு காணாத வறட்சியில் சிக்கித் தவிக்கிறது சென்னை மாநகரம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மக்கள் குடங்களுடன் அலைந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வறட்சிக்கு இயற்கை மீது பழி போட்டுத் தப்பக் கூடாது. மாறாக மக்கள்தான் இதற்கு முழுப் பொறுப்பும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நீர் நிலைகளை காக்கத் தவறியது, பெரு மழை பெய்தபோது அதை சேமித்து வைக்கத் தவறியது, மழை நீர் வடிகால் கட்டமைப்புகளை முற்றிலும் மறந்து போனது என பல காரணங்களை நிபுணர்கள் அடுக்குகின்றனர்.
இதையெல்லாம் செய்யத் தவறியது மக்கள் என்றால், இதை திட்டமிட்டு அமல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அரசும் அந்தக் கடமையிலிருந்து தவறி விட்டதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். சென்னையில் வறட்சி என்பது நிச்சயம் மனிதத் தவறுதான், இயற்கையை இதில் குறை சொல்லக் கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வறட்சி
அரசும், மக்களும் முழுமையாக செயல்பட்டிருந்தால், விழிப்புணர்வுடன் இருந்திருந்தால், நிச்சயம் இந்த வறட்சியை ஓரளவு தடுத்திருக்க முடியும். இந்த அளவுக்கு கஷ்டப்பட வேண்டி வந்திருக்காது என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அனைவருமே தங்களது கடமையிலிருந்து தவறி விட்டதால்தான் இந்த அளவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
மழைநீர் வடிகால்
இதுகுறித்து சென்னை மழை மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கடந்த 2009 முதல் 2019ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நிலத்தடி நீர் அளவு அபாயகரமான அளவுக்குப் போய் விட்டது. மக்கள் மட்டும் மழை நீர் வடிகால் அமைப்புகளை சரியாக கடைப்பிடித்திருந்தால் நிச்சயம் இதைத் தடுத்திருக்க முடியும்."
ஜெயலலிதா
"மழை நீர் சேமிப்பு என்பது இன்று நேற்று வந்தது அல்ல. காலம் காலமாக நமது முன்னோர்கள் இதைக் கடைப்பிடித்து வந்தனர். குஜராத்தில் இதற்கு பண்டைய ஆதாரமே கிடைத்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே மழை நீர் சேகரிப்பு முறை இருந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கடந்த 2001ம் ஆண்டு அதை தீவிரமாக கடைப்பிடிக்க உத்தரவிட்டார், அதை தீவிரமாக கண்காணிக்கவும் செய்தார். சட்டத் திருத்தமே கூட கொண்டு வந்தார். நாடு முழுவதும் இது போல சட்டம் கொண்டு வந்து மழை நீர் சேகரிப்பை அமல்படுத்திய முதல் மாநிலம் தமிழகம்தான்."
வேதனை
"அப்படி சட்டப்பூர்வமாக இதை மாற்றிய முதல் மாநிலம் இன்று வறட்சியால் தவிக்கிறது, தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கிறது என்பதை நினைக்கும் போது வருத்தமாகவும்,வேதனையாகவும் இருக்கிறது. ஆனால் இது முழுக்க முழுக்க மக்களின் தவறும், அரசின் கடமை தவறிய செயலுமே ஆகும். நாம் நினைத்திருந்தால் இதை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது."
நிலத்தடி நீர் மட்டம்
"உடனடியாக தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அது மிக மிக முக்கியம். தற்போது 50சதவீத மக்கள்தான் இதை கடைப்பிடிக்கிறார்கள். அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்போது நிச்சயம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. மழை பெய்யும்போது அதை சேமித்து வைக்கத் தவறினால் நாம் எதிர்காலத்தில் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்." என்று சேகர் ராகவன் தெரிவித்துள்ளார்.
சுதாரித்தால் நல்லது
அவர் சொல்வதும் உண்மைதான். ஏரிகளைக் காலி செய்து விட்டோம். பெருமழை பெய்தால் அதை சேகரித்து வைக்க வழி இல்லை. மழை நீர் கால்வாய்கள் சரிவர இல்லை. ஏரிகளை முழுமையாக ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டிக் குவித்துள்ளோம். ஜெயலலிதா கடுமையாக போராடி அமல்படுத்திய மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக மறந்து விட்டோம். பிறகு இப்படித்தான் கஷ்டப்பட நேரிடும். இதைத்தான் ராகவனும் சொல்லியுள்ளார். இனியாவது நாம் சுதாரித்தால்தான் நமக்கு தவிச்ச வாய்க்கு டம்பளர் தண்ணீராவது கிடைக்கும். இல்லாவிட்டால் கஷ்டம்தான்.