வாயில் சர்க்கரை மாத்திரையை போட்டுக் கொண்டு.. ஆசிட்டை எடுத்து குடித்த மேனகா.. கொடுமை!
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த பாட்டி பலி
சென்னை: தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்துவிட்டார் 60 வயது பாட்டி.. இறுதியில் துடிதுடித்தே அவரது உயிர் பிரிந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த ஐயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்.. இவர் தனது மனைவி சுமதி.. இவரது அம்மா மேனகா.. 60 வயதாகிறது.. ஒரே வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார். மேனகா அம்மாவுக்கு சர்க்கரை வியாதி உள்ளது.
நீண்ட நாட்களாகவே சர்க்கரை வியாதி இருந்ததால், இவருக்கு கண் பார்வை குறைபாடும் இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் சுகர் மாத்திரையை வாயில் போட்டு கொண்டு, தண்ணீர் எடுத்து குடிக்க போனார்.. ஆனால், தண்ணீரை குடிக்க முயற்சித்த மேனகா தவறுதலாக அங்கிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து குடித்து விட்டார்.
கொஞ்ச நேரத்தில் தொண்டை, நெஞ்செரிச்சல் தாங்காமல் அலறியுள்ளார்.. ஆனால் அப்போது வீட்டில் யாரும் இல்லை.. ஆனால், அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மேனகாவை மீட்டு ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்... பிறகு, மேனகாவை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எவ்வளவோ தீவிரமான சிகிச்சை தரப்பட்டும் மேனகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்... ஆசிட் பயன்பாடுகள் இப்போது குறைந்துவிட்டது.. நிறைய கடைகளில் ஆசிட் விற்கப்படுவதும் இல்லை.. ஆனால் சர்வசாதாரணமாக ஆசிட்டை வீட்டில் கைக்கு எட்டும்படி வைத்திருந்தது அதிர்ச்சியாக இருக்கிறது.. அதிலும் கண்பார்வை குறைவாக உள்ளவர்கள் இருக்கும் இடத்தில் இப்படி அலட்சியமாக இருந்தது அதைவிட அதிர்ச்சியாக இருக்கிறது.. தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்து பலியான மேனகா அம்மாவின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.