பெற்ற தாயை கழுத்தறுத்து கொன்ற எத்திராஜ்.. தற்கொலைக்கு முயன்ற போது வயிற்றில் சிக்கிய கத்தி
Recommended Video
சென்னை: சென்னை பள்ளிகரணை சாய்கணேஷ் நகரில் எத்திராஜ் என்பவர் தன்னுடைய தாயை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தனக்கு தானே கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டு உயிருக்கு போராடி உள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை பள்ளிகரணை சாய்கணேஷ் நகரில் சரஸ்வதி(70) மற்றும் அவரது மகன் எத்திராஜ்(42) ஆகியோர் வசித்து வந்தனர். எத்திராஜ் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கல்யாணம் ஆகியும் எத்திராஜ் உடன் வாழ விரும்பாமல் அவரது மனைவி பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தாய் சரஸ்வதியின் உடல் நிலையில் அண்மையில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதை பார்த்த எத்திராஜ் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை, திடீரென தாய் சரஸ்வதியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கத்திக்குத்து
கத்தியால் வயிற்றில் குத்திய எத்திராஜிக்கு கத்தி வயிற்றிலேயே மாட்டிக் கொண்டது. இதனால் வலியால் துடித்து அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்ததில் கழுத்து அறுபட்ட நிலையில் சரஸ்வதி பிணமாக கிடந்துள்ளார்.
சரஸ்வதி உடல் மீட்பு
உடனடியாக இது குறித்து பள்ளிகரணை போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பெறும் எத்திராஜ்
வயிற்றில் கத்தியுடன் இருந்த எத்திராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை
கொலை தொடர்பாக 302வது பிரிவின் கீழ் பள்ளிக்கரணை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். பெற்ற மகனே தாயை கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.