தண்ணீருக்கு ஏங்கி தவிக்கும் சென்னை.. இரவு பகலாக காலி குடங்களுடன் வீதியில் அலையும் மக்கள்
Recommended Video
சென்னை: சென்னையில் காலி குடங்களுடன் தண்ணீரை தேடி தெருதெருவாக மக்கள் அலையும் அவல நிலை மேலும் அதிகரித்துள்ளது.
தண்ணீரை எங்கே பார்ப்பது என்று ஏங்கும் அளவிற்கு தற்போது தலைநகர் சென்னையில், கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. ஐடி நிறுவனங்கள், பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மருத்துவமனைகள், என பார்க்கும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பிரச்சனையே பிரதானமாக உள்ளது.
இது தவிர கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், தண்ணீர் தட்டுப்பாட்டால் கழிவறைகள் மூடப்பட்டுள்ளன என்பது மக்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் மழை பெய்து கிட்டத்தட்ட 200 நாட்களுக்கும் மேல் ஆகிறது.
இதனால் சென்னையில் வரலாறு காணாத கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீருக்காக மக்கள் இரவு தூக்கத்தையும் தொலைத்து விட்டு, அலைந்து திரியும் நிலையே காணப்படுகிறது.
நான் கிராமத்து பொண்ணு.. ஊக்க மருந்து பயன்படுத்தவே இல்லை.. அடிச்சு சொல்றேன்.. கோமதி மாரியப்பன்
லாரி தண்ணீரை டோக்கன் முறையில் பெறும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இது பற்றி பேசிய பொதுமக்கள் தண்ணீருக்கு, இவ்வளவு தட்டுப்பாடு ஏற்படும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. இத்தனை வருடங்கள் தாங்கள் பார்த்திராத அளவிற்கு தண்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
வீடு ஒன்றிற்கு 5 குடங்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டனர். காலை முழுவதும் பணிக்கு போய் வந்து அசதியாக இருப்பதால், சற்று ஓய்வெடுக்கலாம் என நினைப்போம்.
ஆனால் வீட்டில் தண்ணீர் இருக்காது. எனவே தண்ணீர் லாரி எப்போது வரும் என இரவு முழுவதும் கண்விழித்து காத்திருக்கும் நிலை மிகவும் கடினமாக உள்ளதாக கூறியுள்ளனர்.
குடிநீருக்கு மட்டுமல்ல அத்தியாவசிய தேவைகளுக்கும் குடி தண்ணீர் பற்றாக்குறை தான் உள்ளது. எனவே வீடு ஒன்றிற்கு இன்னும் 5 குடங்கள் கூடுதலாக வழங்கினால் சற்று ஆறுதலாக இருக்கும் என வேதனையுடன் கூறியுள்ளனர்.
மேலும் பேசிய பொதுமக்களில் சிலர், தாங்கள் தற்போது தேனம்பேட்டையிலிருந்து வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு வந்து தண்ணீர் எடுத்து செல்வதாக குறிப்பிட்டனர். முதலில் 10 குடங்கள் வரை கொடுக்கப்பட்டு வந்த தண்ணீர், தற்போது படிப்படியாக குறைக்கப்பட்டு 5 குடங்களாக்கப்பட்டு விட்டது.
இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை எடுத்து வந்து, குடங்களில் தண்ணீர் பிடித்து செல்வதாக கூறினர். சமயத்தில் லாரிகளுக்கு தண்ணீர் சப்ளை இருப்பதில்லை. அந்த நேரங்களில் லாரி டிரைவர்களிடம், கெஞ்சி கூத்தாடி தண்ணீர் வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுவதாக புலம்பினர்.
மேலும் பேசிய சென்னை வாசிகள் மெட்ரோ தண்ணீர் தற்போது அதிகம் வருவதில்லை. எனவே தெருமுனைகளில் உள்ள அடி பம்புகளில்3 மணி நேரம் வரை கால்கடுக்க காத்திருந்து, தண்ணீர் அடித்து குடங்களில் பிடித்து செல்வதாக கூறினர்.