முழு லாக்டவுன்: விமான சேவைகள் வழக்கம் போல இயங்கும்- சென்னை விமான நிலையம்
சென்னை: சென்னையில் வரும் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் போது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்போதைய நடைமுறைகளுடன் வழக்கம் போல செயல்படும் என்று சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஜூன் 19-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமலாக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் ஜூன் 19 முதல் 30-ந் தேதி வரை அனைத்து வகை வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்படும்.
இந்த முழு லாக்டவுன் காலத்தில் அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்களை உபயோகிக்க அனுமதிக்கப்படும். பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் திறந்திருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
சென்னை + 3 மாவட்ட மக்களே.. மறந்தும் பைக், காரை வெளியே எடுத்து விடாதீர்கள்.. அரசு உத்தரவை பாருங்க
இந்த நிலையில் சென்னை விமான நிலையம் இன்று மாலை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் 19 முதல் 30-ந் தேதி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் போது விமான சேவைகள் இயங்குமா? என தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. இந்த கால கட்டத்தில் தற்போதைய நடைமுறைகளுடன் சென்னை விமான நிலையம் தொடர்ந்து இயங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் பொது வாகனப் போக்குவரத்து முடக்கப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில் விமான நிலையத்துக்கு எப்படி வருவது? எனவும் சென்னை விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.