ஜப்பான் தொழில்நுட்பம்.. சென்னையில் வேகமாக உருவாக்கப்படும் 3 குட்டி காடுகள்.. மியாவாகி பாரஸ்ட்!
சென்னை: சென்னையில் மியாவாகி தொழில்நுட்பம் மூலம் குட்டி காடுகளை உருவாக்க உள்ளனர். சென்னையில் மொத்தம் இந்த தொழில்நுட்பம் மூலம் மூன்று காடுகள் உருவாக்கப்பட உள்ளது.
ஜப்பானை சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் தாவர வளர்ப்பு எக்ஸ்பர்ட் அகிரா மியாவாகி. அகிரா மியாவாகி உருவாக்கிய செடி வளர்ப்பு முறைதான் மியாவாகி தொழில்நுட்பம். உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு சென்று இவர் தனது மியாவாகி தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்து வருகிறார்.
92 வயதாகும் இவர் 1993ல் இருந்தே உலகம் முழுக்க பல்வேறு பெருநகரங்களுக்கு சென்று எப்படி காடுகளை வேகமாக உருவாக்குவது, மரங்களை வேகமாக வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்து வருகிறார். உலகில் இருக்கும் பல பெரு நகரங்கள் இவரின் முறையை பின்பற்றி வருகிறது.
மொத்தம் 10.. சென்னை, மதுரை தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்.. கொரோனா பலி எண்ணிக்கையில் சந்தேகம்
உலக நாடுகள் பல
மியாவாகி தொழிநுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேகமாக மரங்களை வளர்க்கும் தொழில்நுட்பம் ஆகும். மரங்கள் சாதாரணமாக வளரும் வேகத்தை விட இந்த மியாவாகி தொழில்நுட்பம் மூலம் 10 மடங்கு வேகமாக வளரும். அதேபோல் 30 மடங்கு அடர்த்தியாக இதன் மூலம் மரங்கள் வளரும். ஒரே இடத்தில் அருகருகே நிறைய உள்ளூர் மரங்களை நடுவது இந்த தொழில்நுட்பம் ஆகும்.
சிறப்பான விஷயம்
இதில் முக்கியமான விஷயம், வெறும் 20 வருடங்களில் இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காடுகளை உருவாக்கலாம். அதிலும் 3 வருடங்களுக்கு பின் இதை கவனிக்க வேண்டியதே இல்லை. அதுவாக தானாக வளர்ந்து கொள்ளும். ஆம், செடிகளை நட்டு 3 வருடம் கவனித்தால் போதும், அதன்பின் அந்த மரங்கள் தானாக வளர்ந்து காடாக மாறிவிடும். இதனால்தான் உலக நாடுகள் மியாவாகி தொழில்நுட்பம் மீது கவனம் செலுத்துகிறது.
சென்னை எப்படி
இந்தியாவில் இருக்கும் பெங்களூர் போன்ற பெருநகரங்கள் இந்த மியாவாகி தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்த தொடங்கிவிட்டது. இந்த நிலையில் சென்னையில் மியாவாகி தொழில்நுட்பம் மூலம் குட்டி காடு ஒன்றை உருவாக்க உள்ளனர். சென்னையில் உருவாக்கப்பட உள்ள மூன்றாவது காடு ஆகும் இது. சென்னையில் ஏற்கனவே கோட்டூர்புரம் மற்றும் அடையார் பகுதிகளில் இரண்டு காடுகள் இப்படி உருவாக்கப்பட்டு ,வளர்க்கப்பட்டு வருகிறது.
இரண்டு காடுகள் வருகிறது
அடையாரில் 2000 செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 40 வகையான செடிகள் அடையாரில் நடப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் சதுர அடிக்கு இந்த அடையார் காடு உருவாக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் வளசரவாக்கத்தில் மொத்தம் 700 செடிகள் நடப்பட்டு உள்ளது. இங்கு 45 வகையான செடிகள் நடப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் சதுர அடிக்கு இங்கு செடிகள் நடப்பட்டுள்ளது.
வெற்றி பெற்றது
சில மாதங்கள் முன் உருவாக்கப்பட்ட இந்த காடுகள் தற்போது வேகமாக வளர தொடங்கி உள்ளது.முதல் முயற்சியிலேயே இது பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனால் சென்னையில் வேறு இடங்களிலும் இதை பயன்படுத்த உள்ளனர். மியாவாகி முறை நினைத்ததை விட சிறப்பானதாக இருக்கிறது. சென்னைக்கு இதுதான் உகந்த முறை என்று கூறுகிறார்கள்.
ஆலந்தூர் எப்படி
மூன்றாவதாக தற்போது ஆலந்தூரில் இதேபோல் காட்டை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அங்கு 2000 செடிகளை முதல் கட்டமாக நட இருக்கிறார்கள். 35 சென்ட் நிலத்தில் இந்த குட்டி காட்டை உருவாக்க உள்ளனர். இரண்டு வருடங்களில் இது வளரும்.அதன்பின் 10 வருடங்களுக்குள் இது காடாக மாறும் என்று கூறியுள்ளனர். இதற்கு பெரிய அளவில் தண்ணீர் தேவை இருக்காது. கழிவு நீரை சுத்தப்படுத்தி, இந்த காட்டை உருவாக்க உள்ளனர்.
சிறப்பாக இருக்கும்
ஆலந்தூரில் உருவாக்கப்படும் இந்த காடு மட்டும் மொத்தம் 11.7 டன் கார்பன் டை ஆக்ஸைடை ஒரே வருடத்தில் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 4 டன் ஆக்சிஜனை அடுத்த வருடத்திற்குள் இது வெளிப்படுத்தும். பெரிய அளவில் தண்ணீர் தேவை இல்லை. சென்னையின் வெப்பத்தை இது குறைக்க உதவும். விரைவில் போதிய அளவில் நிலங்களை பெற்று சென்னையின் மற்ற இடங்களிலும் இந்த குட்டி மியாவாகி காடுகளை உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.