விடாது மழை பெய்யும்... சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்ட மக்களே குஷியா இருங்க
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் காலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சிந்தாதரிப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் ,திருவண்ணாமலை ,ராணிப்பேட்டையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறினார்.
கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை மதுராந்தகத்தில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தரமணி, கேளம்பாக்கம், கொளப்பாக்கம் , அண்ணா பல்கலை, திண்டிவனம் பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் காலை முதலே மழை பெய்து வரும் நிலையில் மழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளைய தினம் ஜனவரி 6ஆம் தேதி நீலகிரி, கடலூர், நாகை, மயிலாடுதுறை,விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். ஏனைய கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்காலிலும் கனமழை பெய்யும்.
ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஜனவரி 9ஆம் தேதி தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யும்.
சென்னை சுற்றுவாட்டாரப்பகுதிகளில் 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.