சென்னை அண்ணா சாலை குண்டுவீச்சு சம்பவம்.. 6 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண்
சென்னை: சென்னை அண்ணாசாலையில் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக 6 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு மர்மநபர்கள் கடந்த மார்ச் 3ம் தேதி நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் வெடிகுண்டுகளை ஒரு காரின் மீது வீசினார். அந்த கார் வேகமாக சென்றுவிட்டதால் இரு நாட்டு வெடிகுண்டுகளும் கீழே விழுந்து வெடித்து சிதறின.இதில் அருகில் இருந்து காரின் கண்ணாடியும், ஷோருமின் கண்ணாடியும் சேதமடைந்தது.
இந்த குண்டுவீச்சை நிகழ்த்திய மர்ம நபர்கள் மேயர் சுந்தர்ராவ் சாலையில் புகுந்து தப்பிவிட்டனர். தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்பட உயர் அதிகாரிகளும் வந்து ஆய்வு நடத்தினர்.
அதன்பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு நடத்தியதில் கதீட்ரல் சாலை வழியாக அண்ணாசாலை நோக்கி சென்ற காரினுள் இருந்த ரவுடியை கொல்வதற்காக குறிவைத்தே வெடிகுண்டை வீசியிருப்பது தெரியவந்தது. இந்த காரினை 4 இருசக்கர வாகனங்களில் 8பேர் பின் தொடர்ந்து வந்ததும் சிசிடிவியில் தெரியவந்தது.
இதையடுத்தது 3 தனிப்படைகள் அமைத்த காவல்துறையினர் சம்பவத்தில் தொடர்புடைய 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேரை தீவிரமாக தேடி வந்தனர் .
இந்நிலையில் குண்டு வீச்சு தொடர்பாக சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் இன்று 6 பேர் சரண் அடைந்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.