செங்கல்பட்டு, திருமால்பூர், பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..விரைவு ரயில் குறித்து முக்கிய அறிவிப்பு
சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் வரை 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விரைவு ரயில் சேவை நாளை(சனிக்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பினை சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை புறநகர் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்த ரயில் தான் கடற்கரை டூ திருமால்பூர் விரைவு ரயில். இந்த ரயில் மாம்பலம், கிண்டி, தாம்பரம், உள்பட ஒரு சில ரயல்நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இதனால் பயணிகள் இந்த ரயில்களில் பயணம் செய்து அலுவலகம் செல்வதற்கு ஆர்வம் காட்டி வந்தார்கள்.
இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேளைகளில் விரைவு இந்த விரைவு ரயிலில் மிகப்பெரிய அளவில் கூட்டம் இருக்கும். அப்படி ஒரு நாள் கூட்டம் இருந்த சமயத்தில் தான் கோர விபத்து நடந்தது. ஆம் சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் ஒரு நாள் திருமால்பூர் விரைவு ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது.
அதில் ஏராளமானோர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்து கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக படிக்கட்டை ஒட்டியுள்ள சுவரில் மோதி பயணிகள் கீழே விழுந்தனர்.இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் வரை செல்லும் விரைவு ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. விபத்துக்கு காரணமாக இருந்த தடுப்பு சுவர் அகற்றப்பட்டதை தொடர்ந்து மீண்டும் நாளை(சனிக்கிழமை) முதல் திருமால்பூர் வரை விரைவு ரயில் சேவையை தொடங்கப்பட உள்ளது.
சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ், இன்று செய்தியாளர்களை சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.50. 8.25, 8.50க்கு செங்கல்பட்டு -கடற்கரை இடையே புறநகர் விரைவு ரயில்கள் இயக்கப்படும். இதேபோல் காலை 7.05 மற்றும் 8.00 மணிக்கு திருமால்பூர்- கடற்கரை இடையே விரைவு ரயில்கள் இயக்கப்படும். இதேபோல் மாலை 6.13 மணிக்கு சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையே விரைவு ரயில் மீண்டும் இயக்கப்படும்.இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து புதுச்சேரி வரை இயக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட ரயில், நாளை முதல் (ஜுன்1) முதல் சென்னை எழும்பூர் மற்றும் புதுச்சேரி இடையே மீண்டும் இயக்கப்படும்" என்றார்.