நள்ளிரவு பூஜை... தொழிலதிபரை கொன்ற சாமியார்! கார் ஓட்டுநர் திடுக் தகவல்
சென்னை: சென்னையில் நள்ளிரவு பூஜைக்கு அழைத்து தொழில்அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் ரஞ்சித் குமாரின் கார் ஓட்டுநர் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பல திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
சாமியார் ரஞ்சித் குமார், கார் ஓட்டுநர் ராஜேஷ் உள்பட 6 பேர் சேர்ந்து தொழிலதிபர் பழனிச்சாமியை கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தலைமறைவான சாமியார் ரஞ்சித் குமார் ஏராளமான தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
சேலையூர் சாமியார்
சென்னை சேலையூரை அடுத்த மப்பேடு கணேஷ் நகர் இரண்டாவது தெருவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெய் சக்தி பீடத்தை கட்டி, சாமியார் ரஞ்சத் குமார் என்பவர் அறக்கட்டளையாக நிர்வகித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் எதிரே சிறிய கோவிலை கட்டி அங்கு விஷேச நாட்களில் பூஜைகள் செய்து வந்துள்ளார்.
சாமியார் வளர்ச்சி
இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக வளர்ச்சி அடையாத நிலையில் கடந்த ஓராண்டில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். சாமியாரை பற்றி கேள்விப்பட்டு, சக்தி இருப்பதாக நம்பி ஓராண்டாக ஏராளமான பணக்காரர்கள் மப்பேடு வந்து நள்ளிரவு பூஜை செய்துள்ளார்கள். அப்படி வந்தவர்களை மயக்கி ஏராளமான பணத்தை சாமியார் பறித்துள்ளாராம். இது பற்றி கார் ஓட்டுநர் ராஜேஷ் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
பழனிச்சாமி கொலை
சென்னையின் பல தொழிலதிபர்கள் சாமியார் ரஞ்சித்குமாரிடம் வந்து செல்வதை அறிந்த கீழ்க்கட்டளையைச் சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளரான தொழிலதிபர் பழனிச்சாமியும் (47), அவரிடம் பூஜைக்கு வந்துள்ளார். சாமியார் ரஞ்சித்குமார் நள்ளிரவு பூஜை நடத்தியதோடு பழனிச்சாமியை மயக்கி ரூ.10 லட்சம் பணத்தை பறித்துள்ளார். அப்போது பழனிசாமியை சாமியாருடன் இருந்தவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணை
இதையடுத்து பழனிச்சாமியை காருக்குள் வைத்து சத்யா நகர் பூங்காவில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதுபற்றி சேலையூர் போலீசில் முத்துலட்சுமி என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரை ஏற்று போலீசார் விசாரித்ததில் சாமியார் ரஞ்சித்குமாரால் தொழிலதிபர் பழனிச்சாமி கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
ஓட்டுநர் சரண்
இந்நிலையில் போலீசார் தேடுவதை அறிந்து, சாமியாருடன் இருந்த மாரிமுத்து, சோமசுந்தரம் ஆகிய இரண்டு பேர் சேலையூர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இதையடுத்து சாமியார் ரஞ்சித்குமாரின் கார் ஒட்டுநர் ராஜேஷ்சும் சரண் அடைந்துள்ளார். இவர் முன்னதாக தொழிலதிபர் பழனிச்சாமியிடம் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.
சாமியார் தலைமறைவு
ஓட்டுநர் ராஜேஷ், சாமியார் ரஞ்சித் குமார் உள்பட 6 பேர் சேர்ந்துதான் பண விவகாரத்தில் தொழில் அதிபர் ரஞ்சித்தை கொன்றுள்ளதாக தெரிகிறது. மேலும் ஒட்டுநர் ராஜேஸ் பழனிச்சாமி கொலை தொடர்பாக மட்டுமல்லாமல் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளாராம். ஏற்கனவே சரண் அடைந்த இரண்டு பேருடன், ஒட்டுநர் ராஜேஷையும சேர்ந்து நாளை 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதேநேரம் சாமியார் ரஞ்சித்குமாரை பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும என்பதால் அவரை கைது செய்ய மப்பேடு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.