மத்திய சென்னை.. மறுபடியும் அதிமுகவுக்கு கை கொடுக்குமா.. அல்லது கைவிடுமா?
மத்திய சென்னையின் தொகுதி நிலவரங்கள் எப்படி உள்ளன?
Recommended Video
சென்னை: மத்திய சென்னையின் எம்பி எஸ்.ஆர். விஜயகுமார் வரப்போகும் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறார்.
வரலாற்று சிறப்புகளை கொண்ட பல இடங்களை தன்னகத்தே வைத்ததுதான் மத்திய சென்னை. தலைமைச் செயலகம், ஹைகோர்ட், ரிசர்வ் வங்கி, நேரு விளையாட்டு அரங்கம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், மெரினா பீச், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் பல்நோக்கு ஆஸ்பத்திரி, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்கள் என எல்லாமே மத்திய சென்னையில்தான் அடங்கி இருக்கிறது.
இத்தகைய பெருமை வாய்ந்த மத்திய சென்னையை கட்டிக்காத்து வந்ததில் பெரும் பங்கு திமுகவுக்கே போய் சேரும். ஏனெனில் மத்திய சென்னை எப்பவுமே திமுகவின் கோட்டை என்றுதான் சொல்லப்படும். காரணம், முரசொலி மாறன், தயாநிதி மாறன் என பல விஐபிகளை கொடுத்ததும், அவர்களை எம்பியாக தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்ததும் மத்திய சென்னைதான்.
தயாநிதி மாறன்
ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக திமுகவின் கோட்டை என்பதை உடைத்தெறிந்தவர்தான், அதிமுகவின் எஸ்.ஆர்.விஜயகுமார். 44 வயதான விஜயகுமார் ஒரு வக்கீலும் கூட. இவர் எதிர்த்து போட்டியிட்டது யாரை தெரியுமா? தயாநிதி மாறனைதான். 13,28,027 வாக்காளர்கள் நிறைந்த மத்திய சென்னையில் 45,841 வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதியை தோற்கடித்தார் விஜயகுமார். இவர் மிகவும் பிரபலமானதே நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காகத்தான்.
சிறந்த எம்பி
நாடாளுமன்ற விவாதங்களில் 62 முறை விஜயகுமார் கலந்து கொண்டாலும், இவர் அவையில் எழுப்பிய கேள்விகள் கொஞ்ச நஞ்சமல்ல.. கிட்டத்தட்ட 825 கேள்விகளை எழுப்பி அவையையே திணறடிக்க வைத்திருக்கிறார். இவரது வருகைப்பதிவேடும் 79 சதவீதம் காட்டுகிறது என்றால் மிக சிறந்த முறையில் எம்பி பதவியை இவர் வகித்திருப்பதாகவே தோன்றுகிறது.
சன்சத் ரத்னா 2018”
அதற்காகத்தான் இவருக்கு சென்னை ஐஐடியில் "சன்சத் ரத்னா 2018"-ஆம் ஆண்டுக்கான விருதுகள் பிரைம் பாய்ன்ட் என்ற நிறுவனம் சார்பில் சமீபத்தில் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டது, கேள்விகள் எழுப்பியது, வருகை பதிவேடு என அனைத்தையும் ஆராய்ந்து அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தரப்படும் விருது இதுவாகும்.
வளர்ச்சி திட்டங்கள்
இந்த விருதை பெறுவதில் மொத்தமுள்ள 513 எம்பிக்களில் விஜயகுமார் 21-வது இடத்தை பிடித்தார் என்றால் தமிழகத்தை பொறுத்தவரை முதல் 5 எம்பிக்களில் முதலாவது இடத்தை பிடித்தவர் ஆவார். இவர் பொறுப்பேற்றதும் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி 21.53 கோடி ரூபாய் ஆகும். இதில் 17.76 கோடிரூபாயை தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு செலவு செய்துவிட்டு, அதில் மீதம் 5.02 கோடி ரூபாயை மிச்சம் வைத்திருக்கிறார்.
மீண்டும் வெல்வாரா?
இவ்வளவு சிறப்பாக விஜயகுமார் செயல்பட்டாலும், இந்த முறையும் அதிமுக சார்பாக இவரே பெறுவாரா? அல்லது மத்திய சென்னை எப்போதுமே தங்களின் கோட்டை என்பதனை திமுக தக்க வைக்குமா என்பதை பார்ப்போம்!!