சென்னையை சுற்றி சூப்பர் மழை இருக்கு.. ஆனால் இந்த 4 மாவட்டங்களில் அதுக்கும் மேல இருக்கு
சென்னை: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி,தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்தசில நாட்களா கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருவள்ளூர், கன்னியாகுமரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவு கனமழை பெய்ததன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இந்த மழை தொடருமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலை
இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி,தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம் திருவண்ணாமலை
சென்னை புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது நேற்று சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்டமாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
7 செமீ மழை
தமிழகத்தில் வெப்ப சலனத்தால் 10 சென்டிமீட்டர் மழை பெய்ய வேண்டும் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது இது இயல்பைவிட 30 சதவீதம் குறைவு.ஆகும்.
கடலுக்கு செல்ல வேண்டாம்
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய தென்மேற்கு அரபிக் கடலில் 40 முதல் 50 சதவீத வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உளளது. கேரளா, கர்நாடகா மற்றும் தென்கடரோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மன்னார் வளைகுடா, அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் வாழும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்" இவ்வாறு கூறினார்.