பஸ்ஸை வழிமறித்து கல்லூரி மாணவர்கள் ரகளை.. போலீஸிடம் மாணவிகள் போட்டுக்கொடுத்ததால் தலைதெறிக்க ஓட்டம்
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவிகள் முன்பு கெத்து காட்டுவதாக நினைத்துக் கொண்டு மாநகர பேருந்தை கல்லூரி மாணவர்கள் சிலர் வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர்.
ஆனால், யாரிடம் கெத்து காட்ட நினைத்தார்களோ அந்த மாணவிகளே கடைசியில் போலீஸிடம் போட்டுக் கொடுத்ததால் மாணவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
தற்போது அந்த வீடியோவின் அடிப்படையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
உரத்தை போதைப்பொருள் என்ற பாஜக.. நம்பிய எடப்பாடி! கொக்கைன் கடத்தினாரா திமுக கவுன்சிலர்? வெளியான உண்மை
அதிகரிக்கும் அட்டகாசம்
சென்னையில் சமீபகாலமாக கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் தலைதூக்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோதலில் ஈடுபடுவது; கத்தி, அரிவாளை எடுத்துக் கொண்டு மற்ற கல்லூரி மாணவர்களை துரத்துவது போன்ற சம்பவங்கள் அதிகம் அரங்கேறி வந்தன. பின்னர் போலீஸார் எடுத்த கடும் நடவடிக்கைகள் காரணமாக மாணவர்களின் கொட்டம் சற்று அடங்கியிருந்தது. ஆனால், சில மாதங்களாக கல்லூரி மாணவர்கள் விஷயத்தில் போலீஸார் மெத்தனம் காட்டி வருவதால் மாணவர்கள் மீண்டும் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொது இடங்களில் சண்டை போடுவது, ரயில்களில் பட்டா கத்தியை கொண்டு செல்வது என கல்லூரி மாணவர்களின் சேட்டை மீண்டும் அதிகரித்துள்ளது. அப்படியொரு சம்பவம்தான் நேற்று நடைபெற்றிருக்கிறது.
பேருந்தை மறித்த மாணவர்கள்
சென்னை நந்தனம் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர், நேற்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாநகரப் பேருந்து ஒன்று வந்துள்ளது. இதை பார்த்த அந்த மாணவர்கள், மாணவிகள் முன்பு கெத்து காட்டுவதாக நினைத்துக் கொண்டு அந்த பேருந்தை வழிமறித்தனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்ததால் பேருந்து ஓட்டுநரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ரீல்ஸ் வீடியோ
காலை 9.30 மணி என்பதால் அந்த பேருந்துக்குள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், எதை பற்றியும் கவலைப்படாத மாணவர்கள், அந்த பேருந்தின் முன்பு நின்றுகொண்டு ரீல்ஸ் செய்வதற்காக சினிமா வசனங்களை பேசி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். சுமார் 5 நிமிடங்களுக்கும் மேலாக பேருந்தை நிறுத்தி வைத்து அவர்கள் இவ்வாறு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
போட்டுக்கொடுத்த மாணவிகள்
மாணவர்களின் இந்த அட்டகாசத்தை பார்த்துக் கொண்டிருந்த எஸ்ஐஇடி கல்லூரி மாணவிகள் வெறுப்படைந்து, அதை வீடியோ எடுத்து சென்னை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்துக்கு அனுப்பி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, அடுத்த சில நிமிடங்களில் அங்கு போலீஸார் வரவே, கல்லூரி மாணவிகள் அடித்து புரண்டு தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தற்போது அந்த வீடியோவின் அடிப்படையில் இந்த செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.