ஆன்ட்டி.. ஏன் கஷ்டப்படறீங்க.. என் கிட்ட தாங்க.. நைஸாக பேசிய மோகன பிரியா.. மடக்கி பிடித்த போலீஸ்!
ரயில்களில் திருடி வந்த கல்லூரி மாணவி கைதானார்
Recommended Video
சென்னை: "ஆன்ட்டி.. ஏன் கஷ்டப்படறீங்க.. என்கிட்ட தாங்க.." என்று கறுப்பு கலர் ஜீன்ஸ், மஞ்சள் கலர் டி-ஷர்ட் அணிந்திருந்த இளம்பெண்ணின் செயலை பார்த்ததுமே போலீசார் அதிர்ந்து போய்விட்டனர்.
சென்னையில் கொஞ்ச நாளாகவே எலக்ட்ரிக் ரயிலில் நிறைய திருட்டு நடப்பதாக போலீசுக்கு புகார் போய் கொண்டே இருந்தது. குறிப்பாக பெண்கள் கம்பார்ட்மென்ட்டில்தான் பயணிகளிடம் திருடு போவதாக சொல்லப்பட்டது.
தினமும் பர்ஸ், நகை, செல்போன் என்று ஏதாவது திருடு போவது நடந்து கொண்டே இருந்தது. இதனால் தொடர்ச்சியான புகார்கள் எழும்பூர், மாம்பலம் ஸ்டேஷனில் வந்து கொண்டே இருக்கவும், போலீசார் இதில் தீவிர கவனம் செலுத்தினர்.
மாம்பலம் போலீசார் மாறுவேடத்தில் அந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறி, தினமும் கண்காணித்தனர்.. யார் மீதும் முதலில் சந்தேகம் வரவில்லை.. ஆனால் நாள் ஆக ஆகத்தான் ஒரு இளம்பெண்ணின் நடவடிக்கை மீது சந்தேகம் விழ ஆரம்பித்தது.
"ஏன் இப்படி கஷ்டப்பட்டு நிக்கறீங்க? உங்க ஹேண்ட் பேக்கை என்கிட்ட தாங்க.. நான் வெச்சிக்கறேன்" என்று கூட்ட நெரிசலில் நின்று கொண்டிருந்த ஒரு பயணியிடம் கேட்டு வாங்கி கொண்ட இளம்பெண்ணை உற்று கவனித்தனர். கறுப்பு கலர் ஜீன்ஸ் பேன்ட், மஞ்சள் கலர் டி-ஷர்ட் அணிந்திருந்தார்... கொஞ்ச நேரத்தில், அந்த ஹேண்ட் பேக்கில் இருந்து பர்ஸ், செல்போனை நைசாக இளம்பெண் திருடுவதை போலீசார் கண்ணெதிரே பார்த்து அதிர்ந்தனர்.
இதற்கு பிறகுதான் அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பெயர் மோகனபிரியா, தாம்பரத்தில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பை படித்துவருகிறார்... காலையில் காலேஜ் கிளம்பி சென்றுவிடுவாராம்.. பிற்பகல் காலேஜ் முடிந்ததும், ரயிலில் ஏறி திருட ஆரம்பித்து விடுவாராம்.
இதற்காக மோகனப்பிரியா, கடற்கரை - தாம்பரம் எலக்ட்ரிக் ரயிலில் சீஸன் டிக்கெட்டே எடுத்து வைத்துள்ளார். கையில் வைத்திருக்கும் காலேஜ் புத்தகம், அணிந்திருக்கும் மார்டன் டிரஸ்.. இவைகளை பார்த்ததும் யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல், பயணிகள் இவரிடம் தங்கள் உடைமைகளை நம்பி இதுநாள்வரை தந்து வந்துள்ளனர்.
இப்போதைக்கு 4 கிராம் தங்க நகைகள், 500 ரூபாய் நோட்டுக்கள், செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடிய குற்றத்துக்காக மோகனப்பிரியாவைக் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.