காஸ்ட்லி லைஃப் வேணும்னு ஆசைப்பட்டேன்.. அதான் இப்படி செய்துட்டேன்.. மோகன பிரியாவின் வாக்குமூலம்
ரயில்களில் திருடி வந்த கல்லூரி மாணவி வாக்குமூலம் தந்துள்ளார்
Recommended Video
சென்னை: "முகத்தை துணியால் மூடிப்பேன்.. எல்லாரையும் நோட்டம் போடுவேன்.. உதவி செய்ற மாதிரி அவங்க ஹேண்ட் பேக் வாங்கிப்பேன்.. அதில இருக்கிற போன், பணம் திருடிட்டு, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிடுவேன்" என்று கல்லூரி மாணவி மோகனபிரியா போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
சென்னை எலக்ட்ரிக் ரயிலில் கொஞ்ச நாளாகவே நிறைய திருட்டு நடப்பதாக எழும்பூர், மாம்பலம் ஸ்டேஷனில் வந்து கொண்டே இருக்கவும், போலீசார் இதில் தீவிர கவனம் செலுத்தினர். மாம்பலம் போலீசார் மாறுவேடத்தில் அந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறி, தினமும் கண்காணித்தனர்..அப்போதுதான் மோகனபிரியா என்ற கல்லூரி மாணவி சிக்கினார்.
தாம்பரத்தில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பை படித்துவருகிறார்... காலையில் காலேஜ் கிளம்பி சென்றுவிடுவாராம்.. பிற்பகல் காலேஜ் முடிந்ததும், ரயிலில் ஏறி திருட ஆரம்பித்து விடுவாராம். இப்போது கைதாகி உள்ள மோகனபிரியா, போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் இதுதான்:
"என் அப்பா இறந்துட்டார்.. அம்மாவின் மீன் வியாபாரத்தில் அவ்வளவா வருமானம் வருவது இல்லை.. கஷ்டப்பட்டுதான் படிக்க வெச்சாங்க.. ஆனா, என்கூட படிக்கும் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் டிசைன் டிசைனா டிரஸ் போட்டுட்டு வருவாங்க.
எனக்கும் அவங்களை பார்க்கும்போதெல்லாம் ஆசையா இருக்கும்.. வீட்டிலயும் பணம் தர மாதிரி சூழல் இல்லை.. அதனாலதான் ஆடம்பரமாக வாழணும்னு நினைச்சுதான் திருட ஆரம்பிச்சேன்.. காலேஜ் நேரம் தவிர மீதமிருக்கும் நேரத்துல, எலக்ட்ரிக் ரயிலில் ஏறிப்பேன்.. அதனால் பிரண்டை பார்த்துட்டு வர்றேன்னு அடிக்கடி வீட்ல சொல்லிட்டு ரயில்ல ஏறி திருட ஆரம்பிச்சேன்..
பீச் டூ தாம்பரம் ரயிலில்தான் கூட்டம் இருக்கும். நிறைய பேர் மாம்பலம் ஸ்டேஷனுக்கு வருவாங்க.. முகத்தை துணியால் மூடிப்பேன்.. சீட்ல உட்கார்ந்து எல்லாரையும் நோட்டம் போடுவேன்.. உதவி செய்ற மாதிரி அவங்க ஹேண்ட் பேக் வாங்கிப்பேன்.. அதில இருக்கிற போன், பணம் எடுத்துட்டு, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிடுவேன். காஸ்ட்லி டிரஸ்.. ரிச்சான லைப்புக்கு ஆசைப்பட்டுதான் திருடிட்டேன்" என்றார்.
இதற்கு முன்பே மோகனபிரியா திருட்டு சமாச்சாரத்தில் சிக்கி உள்ளாராம்.. படிக்கிற மாணவி என்று அப்போதே போலீசார் மன்னித்து விட்டார்களாம்.. தொடர்ந்து திருட்டில் ஈடுபடவும்தான் போலீசார் இப்போது ஜெயிலில் அடைத்துள்ளனர்!