சென்னை: பைக்கில் பின்னால் அமர்ந்து பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. மே 23 முதல் நடவடிக்கை!
சென்னை: மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் பயணிக்கும் நபரும் தலைக்கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் மே 23 ஆம் தேதி முதல் நடவடிக்கை பாயும் என சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், சென்னையில் கடந்த ஜனவரி 1 முதல் மே 15 ஆம் தேதி வரையிலான 5 மாத காலத்தில் இரு சக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தால் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் 80 பேரும், பின் இருக்கையில் பயணித்த 18 பேரும் உயிரிழந்துள்ளனர். எனவே விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் மே 23 ஆம் தேதி முதல் சென்னை பெருநகர காவல் துறை இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின் இருக்கையில் பயணிக்கும் நபர்களும் தலைக்கவசம் அணிவதையும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள், தலைக்கவசம் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து வரும் நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.