அப்பாடா.. நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை.. 3,300 பேருக்கும் கொரோனா இல்லை! மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னை: சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மால் என்ற பல மாடி ஷாப்பிங் காம்ப்ளக்சில் பணிபுரிந்த 3 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மார்ச் 10ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை பீனிக்ஸ் மால் மற்றும் அங்குள்ள, லைப்ஸ்டைல் கடைகளுக்கு சென்றவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியிருந்தது.
சென்னையில் எந்த ஏரியாவில் கொரோனா அதிகம்.. மண்டல வாரியாக விவரம்
பல ஆயிரம்
மால் பகுதிக்கு பல்லாயிரம் பேர் சென்று இருப்பார்கள் என்பதால் பலருக்கும் அது பரவி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் இன்று அளித்த பேட்டியின்போது கூறியது: பீனிக்ஸ் மால் சென்ற 3,300 பேரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். அதில், ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இல்லை
பீனிக்ஸ் ஊழியர்கள் 2 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால் சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் சென்னையில்தான் அதிகப்படியான கொரோனா வைரஸ் நோயாளிகள் இருக்கிறார்கள்.
சென்னை அதிகம்
நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 110 நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். பீனிக்ஸ் மால் போன்ற பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் அது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கும். அந்த வகையில் மாநகர கமிஷனர் பிரகாஷ் அளித்துள்ள இந்த பேட்டி மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.
ஆய்வுகள்
மேலும் பிரகாஷ் கூறுகையில், 100 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என்ற வகையில் சென்னையில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மொத்த மக்கள் அனைவரையுமே தினமும் ஒரு முறையாவது இந்த சோதனைக்கு உள்ளே கொண்டுவந்து விடுவோம் என்றார்.