இது அதிமுக அரசு இல்லை.. ஆளும் அரசு.. இன்னும் டெஸ்ட்டுகளை அதிகரியுங்கள்.. மக்கள் உங்கள் பக்கம்!
தமிழகம் முழுதும் டெஸ்ட்கள் அதிகமாக்க வேண்டியது அவசியமாகிறது
சென்னை: "இல்லை என்றால் அது இல்லை என்றாகுமா?" என்றே கேட்க தோன்றுகிறது.. நாளுக்கு நாள் தலைதூக்கும் தொற்று எண்ணிக்கை சமூக பரவல் வந்துள்ள அறிகுறியையே காட்டி வருவதால், இன்னமும்கூட சமூக பரவல் இல்லை என்று அரசு சொல்வது ஏற்க முடியவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. உடனடியாக டெஸ்ட்களை அதிகரிக்க வேண்டும் என்பதே திமுக உட்பட கட்சிகள், பொதுமக்களின் ஒரே வேண்டுகோளாக உள்ளது.
கோயம்பேட்டை திறந்துவிட்ட அன்றைக்கும் சரி, கொரோனா 3 நாளில் ஒழிந்துவிடும் என்று முதல்வர் நம்பிக்கை தந்தபோதும்சரி, இந்த அளவுக்கு நம்மை இந்த வைரஸ் பாதிக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டோம்.
இறப்பு விகிதத்தை அரசு குறைத்து காட்டுகிறது, டெஸ்ட்கள் சரியாக எடுக்கப்படவில்லை, வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்தரப்பினர் புகார் சொல்லி வருகின்றனர்... மற்றொரு பக்கம் டெஸ்ட்கள் நிறைய எடுத்து வருகிறோம், சமூக பரவல் எல்லாம் கிடையாது, எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது.உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்" என்கிறார் முதல்வர்!
தீவிரம் எடுக்கும் கொரோனா.. மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!
குறை
இவர்கள் 2 பேருக்கும் உள்ள அரசியலுக்குள் நாம் நுழைய வேண்டியதில்லை என்றாலும், கள நிலவரம் நமக்கு நிஜமாகவே பயமாக உள்ளது.. தொற்று அதிகம் பரவியுள்ளதற்கு அரசை குறை சொல்லிவிடுவார்களோ என்று ஆளும் தரப்பு அச்சப்படுவதுபோல தெரிகிறது.. அப்படி ஒரு எண்ணமே தேவையில்லை என்பதே நம் தாழ்மையான கருத்து.
மனித மீறல்
காரணம், இது வேண்டுமென்றே திட்டமிட்டு நடந்த ஒன்று அல்ல.. மனித மீறல்.. அதனால் சமூக பரவல் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டால்கூட அரசு மீது யாருக்கும் கோபம் வராது.. மாறாக இதை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பது மட்டுமே அரசிடம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாஸ்க்
அதுமட்டுமல்ல, தமிழக அரசு எடுத்து வரும் பல நல்ல விஷயங்களை எதிர்க்கட்சிகள் உட்பட மக்களும் வரவேற்கவே செய்கின்றனர்... இலவச மாஸ்கை ரொம்பவே தாமதமாக அரசு ரேஷனில் விநியோகித்தாலும் சரி, அது முற்றிலும் உபயோகத்திற்குரியதுதான்.. 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததும் பாராட்டக்குரியதுதான்.. அதிக பரிசோதனைகள் செய்வதாகட்டும், பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை உயர்வாகட்டும், இதில் எல்லாமே தமிழகம் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
டெஸ்ட்கள்
அதேபோல, தமிழக சுகாதாரத்துறையை பொறுத்தவரை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.. டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோர் உயிரை தந்து பலரை காப்பாற்றி வருகின்றனர்.. இவர்கள் மட்டும் இல்லையென்றால் பலி எண்ணிக்கை நமக்கு அதிகமாகவே இருந்திருக்கும்... அதனால் அரசு எடுத்து வரும் நல்ல விஷயங்களை கூட்டணியில் உள்ள டாக்டர் ராமதாசும் பாராட்டுகிறார், எதிர்க்கட்சி தலைவரும் பாராட்டவே செய்கிறார். சுருக்கமாக சொன்னால், அதிமுக அரசாக யாரும் பார்க்கவில்லை.. ஆளும் அரசாகவே பார்த்து வருகிறார்கள்.
நடமாட்டம்
அப்படியானால் அரசு செய்ய வேண்டியதுதான் என்ன என்றால், டெஸ்ட்களை அதிகப்படுத்துவது ஒன்றுதான்.. இன்று சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியேறி கொண்டிருக்கிறார்கள்.. அவர்களை எல்லாம் பரிசோதிக்க வேண்டி உள்ளது.. தனிமைப்படுத்தப்பட வேண்டி உள்ளது.. மக்கள் நடமாட்டம் அதிகரிக்க துவங்கி உள்ளதால், இதை தீவிரமாகவும் கண்காணிக்கவேண்டி உள்ளது.
எதிர்க்கட்சிகள்
பஸ்களில் கூட்டம் நிறைய இருப்பதாக சொல்கிறார்கள், அதனால் அதிக எண்ணிக்கை பஸ்களை விட வேண்டி உள்ளது.. முக்கியமாக இப்போதாவது, எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், சொல்லும் கருத்துக்களை அரசு ஆலோசிக்க வேண்டும்.. காரணம், இந்த மாத இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை வந்துள்ளது.
கட்டமைப்பு
சென்னையில் ஒரு லட்சம் படுக்கை வசதிகள் தேவைப்படுகிறது.. கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டி உள்ளது.. நிறைய டெஸ்ட்கள் தேவை, வென்டிலேட்டர்கள் தேவை... இதைதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.. இறப்பு விகிதத்தை குறைத்து சொல்வதினாலோ, சமூக பரவல் இல்லை என்று சொல்லிவிடுவதாலோ மட்டும் தொற்று இல்லை என்று ஆகிவிடாது. மாறாக கூடுதல் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்!