அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை வைக்கலாம்... சென்னை மாநகராட்சி நிபந்தனை கிரீன் சிக்னல்!
சென்னை : திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மறைந்த கருணாநிதியின் சிலையை நிறுவுவதற்கு சென்னை மாநகராட்சி நிபந்தைனையுடன் கூடிய அனுமதியை அளித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை நிறுவ அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது. சிலையை நிறுவுவதற்காக திமுக சென்னை மாநகராட்சியிடம் அனுமதி கோரி இருந்தது.
இந்நிலையில் இன்று நிபந்தனையுடன் கூடிய அனுமதியை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. இப்போது கருணாநிதி சிலையை வைத்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் சாலை விரிவாக்கம் செய்ய இடம் தேவைப்பட்டால் சிலை அகற்றப்படும் என நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் அனுமதி கிடைத்ததையடுத்து அண்ணா அறிவாலயத்தில் நவம்பர் 2ம் தேதி சிலை திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பல்வேறு தேசியத் தலைவர்கள், தமிழகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.