சென்னை சூளைமேட்டில் நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்
சென்னை: சென்னை சூளைமேட்டில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர். இவர் இதுவரை 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். தமிழ் ஆர்வலரான இவர் அவ்வப்போது சமூகம் சார்ந்த கருத்துகளை முன் வைத்து வருவார்.
மத்திய அரசுக்கு எதிராக இவர் வைக்கப்படும் கருத்துகள் சிக்கலில் முடிந்து அவர் மீது வழக்குகள் பாய்வது என்பது தொடர்கதையாகிவிட்டது. நடிகரிலிருந்து அரசியல்வாதியாக புது அவதாரம் எடுத்தவர் மன்சூர்.
நானும் லியாகத் அலிகானும் விஜயகாந்துடன் இருந்திருந்தால் இப்போ கேப்டன்தான் முதல்வர்.. மன்சூர் அலிகான்
நாடாளுமன்றம்
இவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அவருக்கு சீமான் வாய்ப்பளிப்பார் என கருதிய நிலையில் அது நடைபெறவில்லை.
தமிழ் தேசிய புலிகள்
இதையடுத்து நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய மன்சூர் அலிகான் தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய அமைப்பை தொடங்கினார். இதையடுத்து கடந்த தேர்தலில் சுயேச்சையாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை எதிர்த்து தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.
மன்சூர் அலிகான்
கொரோனா தடுப்பூசி குறித்தும் விவேக் மரணம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டை அணுகிய மன்சூர் அலிகானுக்கு தடுப்பூசி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் ரூ 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபகரித்து வீடு
இந்த நிலையில் அரசு புறம்போக்கு இடத்தை அபகரித்து வீடு கட்டியதாக மன்சூர் அலிகானின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மன்சூருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அந்த வகையில் சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக சுமார் 2500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து வீடு கட்டியதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி மன்சூர் அலிகானின் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.