கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
சென்னையில் கட்டிடங்கள் இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை : சென்னை ஆயிரம் விளக்கு அண்ணாசாலை அருகே ஒரு பழைய கட்டடம் இடிக்கப்பட்டபோது, சுவர் வெளிப்புறமாக இடிந்து சாலையில் விழுந்ததில், ஐடி பெண் ஊழியர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் கட்டிடங்கள் இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உட்புறமாக இருந்துகொண்டு பழைய கட்டடத்தை இடிக்கும்போது வெளிப்புறமாக இருந்த சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக நடைபாதையில் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இருவரும் படுகாயங்களோடு மீட்கப்பட்டனர். இதில், தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரியா என்பவர் உயிரிழந்தார்.
சென்னை அண்ணாசாலை, ஸ்பென்சர், அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து மாற்றம்- முழு விபரம்
உலுக்கிய விபத்து
சென்னையில் இன்று காலை நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் அண்ணா சாலையில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென ஒரு பகுதி கட்டட சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது.
20 நிமிடமாக போராடி
இது சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது விழுந்தது. இதில் அப்பெண்கள் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதி காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய பெண்களை மீட்கும் பணியில் இறங்கினர்.
சுமார் 20 நிமிடமாக போராடி, இரு பெண்களையும் படுகாயங்களுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
இளம்பெண் உயிரிழப்பு
உடனடியாக அப்பெண்கள் இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அதில் ஒரு பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றொரு பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த இளம்பெண், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரியா என்பதும், சென்னையில் தங்கி ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
இருவர் கைது
கட்டடம் இடிக்கும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் தொடர்பாக ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ஞானசேகர், ஆப்ரேட்டர் பாலாஜி, மேற்பார்வையாளர் பிரபு ஆகிய மூன்று பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளரான ராமாபுரத்தைச் சேர்ந்த ஞானசேகர் மற்றும் ஜேசிபி ஆபரேட்டரான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மாநகராட்சி உத்தரவு
இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் கட்டிடம் இடிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சென்னையில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்துமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.