கரெக்டா இன்னைக்கு பார்த்தா இந்த அறிக்கை வரனும்.. கையை பிசையும் ரஜினி தரப்பு.. சென்னை மாநகராட்சி செம
சென்னை: ஒரு பக்கம், திருமண மண்டபத்திற்கு சொத்து வரி கட்ட முடியாது என்று, நடிகர் ரஜினிகாந்த், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், இன்னொரு பக்கம், செம அறிவிப்பு வெளியிட்டுள்ளது மாநகராட்சி.
சென்னை ஹைகோர்ட்டில் ரஜினிகாந்த் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய - மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபம் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை என்றும், மார்ச் 24ம் தேதிக்கு பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கியுள்ளதாகவும் அந்த மனுவில் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
மண்டபம் காலியாக இருந்தால் பாதி வரியை திரும்ப தர வேண்டும் என்ற உத்தரவை குறிப்பிட்டு, சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று ரஜினி கோரினார்.
நாளை நள்ளிரவுக்குள்.. சொத்துவரியைக் கட்டாவிட்டால்.. 2% அபராதம்.. ரஜினிக்கு மாநகராட்சி வார்னிங்!
நீதிமன்ற நேரம்
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த், முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென என ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23ல் கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா என கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வதாக யூ டர்ன் போட்டது ரஜினி தரப்பு.
மாநகராட்சி ஊக்கத் தொகை
இப்படி, ஒரு உச்ச நடிகர் சொந்த வரியை செலுத்துவதை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தால், இன்னொரு பக்கம், மாநகராட்சி, ரஜினிகாந்த் தரப்புக்கு, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மாநகர கமிஷனர் பிரகாஷ் இன்று வெளியிட்ட அறிக்கையில், 2020-21 நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் அக்.10 தேதி வரை சொத்து வரி செலுத்திய 5,18,286 சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.4.56 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
15 நாட்களில் செலுத்த வேண்டும்
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919, பிரிவு-104படி, சொத்தின் உரிமையாளர்களால், அந்தந்த அரையாண்டு துவங்கிய முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும். அரசால் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, அரையாண்டு துவங்கிய முதல் 15 தினங்களில், சொத்து உரிமையாளர்களால் செலுத்தப்படும் சொத்துவரியில் ஊக்கத் தொகையாக ஐந்து சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000/- வரை) அளிக்கப்படும்.
5 லட்சம் உரிமையாளர்கள்
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் அக்டோபர் 10 தேதி வரை சொத்து வரி செலுத்திய 5,18,286 சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்பட்ட சொத்துவரியில் ரூ.4.56 கோடி ஊக்கத் தொகையாக நேர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத் திருத்தத்தின்படி, அரையாண்டு துவங்கிய முதல் 15 தினங்களுக்குள் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி செலுத்தப்படாமல் இருந்தால், செலுத்தப்பட வேண்டிய சொத்துவரியுடன் கூடுதலாக ஆண்டிற்கு 2 சதவீதம் மிகாமல் தனிவட்டி விதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த்துக்கு தர்ம சங்கடம்
ஒரு பக்கம், வரி செலுத்துவதை தவிர்க்க ரஜினிகாந்த் முயன்றபோது, மறுபக்கம் 5,18,286 சொத்து உரிமையாளர்கள் முறைப்படி உரிய தேதியில், வரி கட்டிய தகவலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கியுள்ளது. 5,18,286 சொத்து உரிமையாளர்களில் பலரும் கண்டிப்பாக ரஜினியை விட வசதிபடைத்தவர்களாக இல்லை. ஆனாலும் அவர்கள் நீதிமன்றத்தை நாடவில்லை. ரஜினிகாந்த் வழக்கு விசாரணைக்கு வந்த நாளில் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு, அவருக்கு தர்ம சங்கடத்தை மறைமுகமாக ஏற்படுத்திவிட்டது மாநகராட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.