போட் கிளப் தெருக்களை தாரைவார்க்க முடியாது... கோடீஸ்வரர்கள் கோரிக்கையை நிராகரித்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ்
சென்னை: சென்னையில் கோடீஸ்வரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய போட் கிளப் பகுதிக்குள் வெளியாட்கள் வரமுடியாதவாறு கேட் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி குடியிருப்புவாசிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது சென்னை மாநகராட்சி.
பொதுவெளியை ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் தாரைவார்க்க முடியாது என்பதில் மிக உறுதியாக நிற்கிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் இந்த நடவடிக்கைக்காக அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
வட சென்னையில் ஒரு வாரம் 'முழு ஊரடங்கு..?' கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர ஆலோசனை
கோடீஸ்வரர்கள்
சென்னையில் உள்ள போட் கிளப் பகுதியில் தமிழகத்தின் டாப் இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் முன் வைக்கப்பட்ட கோரிக்கை தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, போட் கிளப் பகுதியின் நுழைவுவாயிலில் வெளியாட்கள் யாரும் உள்ளே வர முடியாதவாறு கேட் அமைக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நடைபயிற்சி
மேலும், அந்தக் கடிதத்தில் கொரோனா பரவிவரும் சூழலில் அடையாளம் தெரியாத நபர்கள் பலர் போட் கிளப் பகுதியில் உள்ள தெருக்களில் நடைபயிற்சி செய்வதாகவும், சில நேரங்களில் வெளிப்பகுதிகளில் இருந்து வரும் கார்கள் அங்கே நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் போட் கிளப் பகுதிக்குள், குடியிருப்புவாசிகளை தவிர மற்ற வெளியாட்கள் யாரும் பிரவேசிக்க முடியாதவாறு கேட் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதிர்ச்சி
சென்னை போட் கிளப் குடியிருப்புவாசிகள் நலச்சங்கத் தலைவர் ரவி அப்பாசாமி என்பவர் அளித்த இந்தக் கோரிக்கை கடிதத்தை நிராகரித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். பொது வெளியை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் ஒதுக்க முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் கூறிவிட்டார். போட் கிளப்பில் வசிக்கும் தொழிலதிபர்கள் முதலமைச்சரோடு நேரடியாக தொலைபேசியில் உரையாடும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தும் கூட, பிரகாஷ் ஐ.ஏ.எஸ். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார்.
எதிர்ப்பு
இதனிடையே போட் கிளப் குடியிருப்புவாசிகளின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுவெளியை எப்படி அவர்கள் உரிமை கொண்டாட முயற்சிக்கலாம் என கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், இது ஒரு நவீன தீண்டாமைக்கான நடவடிக்கை என போட் கிளப் குடியிருப்புவாசிகள் நலச்சங்கம் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
கோடீஸ்வரர்கள்
இந்தியா சிமெண்ட்ஸ் அதிபரும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சீனிவாசன், எம்.ஆர்.எஃப். நிறுவனம் மற்றும் முருகப்பா நிறுவன குழுமங்களின் அதிபர்கள், சன் தொலைக்காட்சி அதிபர் கலாநிதி மாறன், பிரபல கட்டுமான நிறுவன அதிபரான ரவி அப்பாசாமி, டி.வி.எஸ். குழுமங்கங்களின் அதிபர் வேனு சீனிவாசன் உள்ளிட்ட இன்னும் பல முக்கிய தொழிலதிபர்கள் சென்னை போட் கிளப் பகுதியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.