கடலோரம் வாங்கிய காற்று.. அக். 31ம் தேதி வரை மெரீனாவில் பாட முடியாது.. மாநகராட்சி விளக்கம் இதுதான்!
சென்னை: மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு அனுமதி எப்போது என்பது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
கொரோனாவால் இந்தியா முழுவதும் கடற்கரைகள், கோயில்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் என பெரும்பாலானவை மூடப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மெல்ல மெல்ல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஊரடங்கை மீறுவோருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். ஊரடங்கில் அத்துமீறலில் ஈடுபட்டால் ரூ 500ம், முகக்கவசம் அணியாவிட்டாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டாலும் ரூ 200ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
மெரினா கடற்கரை
சென்னையின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு இடமான மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் அதையும் மீறி விடுமுறை தினங்களில் கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு தடையை மீறி வருவோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதிக்கின்றனர்.
பாதுகாப்பு
இதற்கிடையே மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், ஆலோசனைகளையும் வழங்கினர்.
அக்டோபர் 5
மேலும், கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அக்டோபர் 5-ம் தேதி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அறிக்கை
மேலும், புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரையில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
டெண்டர்கள்
சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் இருமுறை திறக்கப்படவில்லை எனவும், நவம்பர் 9ம் தேதி இந்த டெண்டர்கள் திறக்கப்படும் எனவும் மூன்று கம்பெனிகள் டெண்டர் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
திறக்க தடை
மெரினாவை பொதுமக்களுக்கு திறப்பதை பொறுத்தவரை, தமிழகத்தில் ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தள்ளுவண்டி கடைகள்
இதையடுத்து, தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரினாவை திறப்பது உள்ளிட்டவை தொடர்பான நவம்பர் 11-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.