பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.. வீடு தேடி வருகிறது
சென்னை: ஜனவரி 1ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வரும் 31ம் தேகிக்குள் வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழக அரசு நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாநிலம் முழுவதும் தடை விதித்துள்ளது. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கருப்பணன், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் விதிக்கப்பட்டுள்ள தடை கட்டாயமாக அமலுக்கு வரும் என்றும், அதில் எந்தவித காலநீட்டிப்பும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தமிழக அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை மூடினால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே மத்திய அரசின் கொள்கை முடிவுப்படி தமிழக அரசு கால அவகாசத்தை நீட்டிக்க தர வேண்டும் என்று அவர்கள் கூறி வந்தனர்.
ஆனால் அதை அரசு ஏற்காத நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி நிர்வாகம் வழியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந் நிலையில் சென்னையிலும் பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநகராட்சி களத்தில் இறங்கியுள்ளது. அதன்படி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் டிசம்பர் 31க்குள் வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்ப டுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி பணியாளர்கள் வீடு தேடி வரும் போது, அவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைத்து விட வேண்டும். அவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்களை கொண்டு மறுசுழற்சி முறையில் அவற்றை பயன்படுத்தி சாலை அமைக்க பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.