வாகனங்களை இஷ்டத்துக்கு நிறுத்த முடியாது.. சென்னை தெருக்களில் பார்க்கிங் சிஸ்டம் வருகிறது
சென்னை: போக்குவரத்து நெரிசலை தடுக்க, வெளிநாடுகளுக்கு இணையான திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர், சென்னை நகரம் முழுவதும் 6,566 பார்க்கிங் இடங்களை சென்னை பெருமாநகராட்சி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்க்கிங் சிஸ்டத்தை அமல்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி, மூன்று ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை உருவாக்கி வருகிறது.
இந்த மூன்று அப்ளிகேஷன்களில் ஒன்று பொதுமக்கள் கட்டணம் செலுத்தி காலியாக உள்ள பார்க்கிங் இடங்களை தேடி பயன்படுத்தும் வகையிலானது. மற்ற இரண்டு அப்ளிகேஷன்கள், அலுவலக பயன்பாட்டுக்கானது.
இந்த தெரு பார்க்கிங் சிஸ்டம் சென்னையில் அண்ணா நகர், பெசன்ட் நகர், மெரினா போன்ற இடங்களில் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முன்னதாக திட்டமிட்டு இருந்தது. இதற்காக மொபைல் அப்ளிகேஷன் தயாரிப்பது மற்றும் பார்க்கிங்குக்கான ஏற்பாடுகள் போன்றவற்றை மேற்கொண்டு வந்தது.
6,566 நிறுத்தங்கள்
இப்போது தியாகராய நகர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், தரமணி திருவான்மியூர் மற்றும் அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் உள்பட சென்னையில் 6,566 பார்க்கிங் இடங்களை கண்டறிந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நடந்தது இதுதான்! இனி நடக்கப் போவதும் இதுவே... தலைவர் அறிக்கையின் பின்னணி!
கட்டணம் வசூல்
ஒட்டுமொத்தமாக சென்னை மாநகராட்சியில் 378 பஸ் ரூட் செல்லும் பகுதியில் 12,047 பார்க்கிங் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்படி, இருசக்கர வாகனத்திற்கு மணிக்கு 5 ரூபாயும், காருக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்ட உள்ளது.
101 இடங்களில் பன்னடுக்கு
இந்த பார்க்கிங் இடங்களில் வாகனங்களை நிறுத்த காலை 8 மணி முதல் இரவு 11மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். சென்னையில் 101 இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்த சிஸ்டம் கொண்டுவருவதற்கான இடங்களையும் சென்னை மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது.
தயாராக உள்ளோம்
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், முன்னாள் ராணுவத்தினர் இந்த திட்டத்தில் போலீசாருடன் இணைந்து செயல்பட உள்ளார்கள். ஜுலையில் இருந்து நிச்சயம் பார்க்கிங் சிஸ்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். மற்றபடி அரசு சொல்லும் தேதியில் பார்க்கிங் சிஸ்டத்தை அமல்படுத்த தயாராக உள்ளோம் என்றனர்.