சென்னையில் கொரோனா எந்தெந்த வார்டுகளில் மிக அதிகம் தெரியுமா? வெளியானது லிஸ்ட்
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட வார்டுகளின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் , சென்னையிலேயே அதிகபட்சமாக கோயம்பேட்டில் 427 பேருக்கு கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13191 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 743 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வழக்கம் போல் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
சென்னையில் நேற்று மட்டும் 557 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8228 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2823 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். 59 பேர் பலியாகி உள்ளனர். 5345 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சடலத்தில் கொரோனா வைரஸ் வாழும் நேரம்... இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட புதிய தகவல்
கோடம்பாக்கம் 2வது இடம்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு வெளியிட்டு வந்த சென்னை மாநகராட்சி நேற்று முதல்முறையாக எந்த வார்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என்பதை வெளியிட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வெறும் 10 பேருக்கே தொற்று
அதேநேரம் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 136 வார்டுகளில் 10க்கும் குறைவான தொற்றுகளே கண்டறியப்பட்டுள்ளது.மொத்தமாக பார்த்தால் 167 வார்டுகளில் மிக குறைந்த அளவிலேயே தொற்று பரவல் இருந்து வருகிறது. எஞ்சிய 33 வார்டுகளில் மட்டுமே நோய் தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டு இருக்கிறது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.
14வார்டுகளில் தலா 100 பேர்
அதில், வார்டு எண்: 77, 58, 59, 52, 53, 72, 56, 57, 50, 93 உள்ளிட்ட 14 வார்டுகளில் 100க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைதவிர்த்து, வார்டு எண்: 55, 73, 48, 61, 76, 38, 97, 54, 74, 60, 36, 62 ,40, 43 உள்ளிட்ட 30 வார்டுகளில் 50க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் இதுவரை மொத்தம் கண்டறியப்பட்டுள்ள தொற்றுகளில் 50 சதவிகித தொற்றுகள், 34 வார்டுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
புளியந்தோப்பில் அதிகம்
சென்னையிலேயே அதிகபட்சமாக கோயம்பேட்டில் 427 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக புளியந்தோப்பில் 265 பேருக்கு தொற்று உள்ளது. நெற்குன்றத்தல் 224 பேருக்கும், பெரியமேட்டில் 186 பேருக்கும், ஜார்ஜ் டவுனில் 155பேருக்கும், கிருஷ்ணாம்பேட்டில் 155 பேருக்கும், ராயபுரத்தில் 135 பேருக்கும், பழைய வண்ணாரப்பேட்டையில் 133 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை தீவிர முயற்சி
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 31 வார்டுகளில் கடந்த 3 நாட்களாக புதிய தொற்றுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பது முக்கியமான தகவல் ஆகும். நோய் தொற்று அதிகம் உள்ள வார்டுகளில் கண்காணிப்பை சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. சென்னை முழுக்க கொரோனா பாதிப்பு மோசமாக இல்லை என்பது மேற்கண்ட பட்டியலில் தெரியவருகிறது. விரைவில் சென்னையில் கொரோனா சரியாகும் என்று நம்பலாம்.