பொய் புகார், மிரட்டல் மூலம் பணம் பறித்த 3 பேர் மீது வழக்கு பதிய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பொய் புகார் மற்றும் மிரட்டல் மூலம் பணம் பறித்த பெண் ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பெண்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்த ஆயிரம் விளக்கு போலீசாருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த டி.வி.எஸ். ராஜசிம்மன் நாயுடு என்பவர் சென்னையை சேர்ந்த கே.எம்.விஷ்ணுபிரியா என்பவருடன் இணைந்து வியாபாரம் செய்து வந்தார். லாபத்தில் முறையாக பங்கு தராததால், விஷ்ணுபிரியாவுடன் வியாபார தொடர்புகளை ராஜாசிம்மன் துண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணுபிரியா, இரண்டு கார்களையும், மொபைல் போன் சிசிடிவி ஹார்ட்டிஸ்க் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டதாக கூறி, சூளைமேடு காவல் நிலையத்தில் ராஜசிம்மன் புகார் அளித்தார்.
இதேபோல, 2018 ஆம் ஆண்டு தனக்கு திருமணத்திற்காக பார்த்து பேசி நிராகரித்த உமாராணி என்பவருடன் விஷ்ணு பிரியா சேர்ந்துகொண்டு, தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் பொய் புகாரில் விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் ஞானசெல்வம், பிரச்சினையை தீர்ப்பதாக கூறி 5 லட்ச ரூபாய் பணம் கேட்டதாகவும், 4 லட்ச ரூபாய் ஏற்பாடு செய்து கொடுத்தபோது, மூவருக்கும் சேர்த்து 20 லட்ச ரூபாய் வேண்டும் என மிரட்டியதாக ஆயிரம் விளக்கு காவல் நிலையம், துணை ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், தன்னிடமிருந்து மோதிரங்கள், மொபைல் போன், வாட்ச், கிரெடிட் கார்ட் என 8 லட்ச ரூபாய் மதிப்புள்ளவற்றை பறித்துவிட்டதாகவும் ஆய்வாளர் மீது குற்றம் சாட்டியள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து, ஆயிரம் விளக்கு காவல் நிலைத்தில் ஆய்வாளர் ஞானசெல்வம், உமாராணி, விஷ்ணுபிரியா ஆகியோர் மூவர் மீதும் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இ.எம்.கே. யஷ்வந்த் ராவ் இங்கர்சால், மனுதரர் ராஜா சிம்மன் நாயுடுவின் புகாரில் முகாந்திரம் இருப்பதால், உரிய முறையில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும், அதுகுறித்த இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.