கிரேட் எஸ்கேப்.. தவறி விழ போனவரை கப்பென பிடித்த விஜயகுமார்.. ரயிலுக்குள் இருந்தே நன்றி சொன்ன பயணி
ரயிலில் தவறி விழ போனவரை காப்பாற்றி உள்ளார் போலீஸ்காரர்
Recommended Video
சென்னை: கொஞ்சம் விட்டிருந்தால்.. ரயிலுக்கு அடியிலேயே விழுந்திருப்பார் அந்த பயணி.. ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது திடீரென தவறி விழ போனார்.. ஆனால் அவரை அலேக்காக பிடித்து.. அப்படியே ரயிலுக்குள்ளே தள்ளி அவரது உயிரை காப்பாற்றினார் ஒரு போலீஸ்காரர்.. அந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
சென்னை எழும்பூரில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.. காலை 6.45 மணிக்கு 8-வது பிளாட்பாரத்தில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.. ரயில் புறப்படும் நேரம் தெரிந்தும் ஒரு பயணி தாமதமாக வந்துவிட்டார்.
ரயில் கிளம்பியது.. அப்போது, ஓடிவந்து அந்த ரயிலில் ஏறினார்.. கையில் ஏகப்பட்ட லக்கேஜ்களையும் வைத்திருந்தார்.
அதனால் ஓடிவந்த வேகத்தில், பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் விழ போனார்.. இதை பார்த்த ரயிலுக்குள் இருந்த பயணிகள், மற்ற பயணிகளும் பதறிவிட்டனர்.. நல்லவேளையாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் அந்த பயணியை கப்பென பிடித்து கொண்டார்.
ரயிலும் வேகமாக நகர தொடங்கியதால், அந்த பயணியை அப்படியே ரயிலுக்குள் பாதுகாப்பாக தள்ளிவிட்டார்.. இதனால் அந்த பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது.. அந்த போலீஸ்காரர் பெயர் விஜயகுமார்.. ஓடும் ரயிலில் இருந்த அந்த பயணி, ரயிலில் இருந்தபடியே போலீஸ்காரருக்கு இரு கைகளையும் கூப்பி... கண்கலங்கியவாறே தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது...
ஓடும் ரயிலில் ஏற வேண்டாம் என்று பலமுறை ரயில்வே ஸ்டேஷன்களில் ஸ்பீக்கர்களில் போலீசார் ஓயாமல் தொடர்ந்து சொல்லி வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.. ஓடும் ரயிலில் ஏறிய பொழுது பரிதாபமாக கீழே விழுந்தவரை தக்க நேரத்தில் உடனடியாக காப்பாற்றிய போலீஸ்காரர் விஜயகுமாரை அங்கிருந்த பயணிகள் பாராட்டினர்.. சிலர் கைகுலுக்கிவிட்டு சென்றனர்.. இந்த சிசிடிவி காட்சிதான் வைரலாகி வருகிறது.